பள்ளிவாசலில் பெண் பிணத்தை புதைக்க எதிர்ப்பு!
மதுரை: மதுரை, மேலூரில் உள்ள பள்ளிவாசலில் பெண் பிணத்தை புதைக்க தமுமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலூர் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரீபாபேகம். இவருக்கும் மசக்கா உல்லா என்பவருக்கும் இடையே கடந்த 13 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் தாய் வீட்டில் ஹரீபா பேகம் வசித்த போது அவருக்கும் எதிர்வீட்டில் வசிக்கும் செந்தில் குமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். பின்னர் வீட்டை விட்டு வெளியேறிய ஹரீபா பேகம், செந்தில்குமாருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் செந்தில் குமார் ஹரீபா பேகத்தை விட்டு விட்டுப் போய் விட்டார். இதையடுத்து கைவிடப்பட்ட ஹரீபா பேகம் தனது தாய் வீட்டிற்குத் திரும்பினார்.
இந்த நிலையில் உடல் நலம் குன்றிய ஹரீபா பேகம் மரணமடைந்தார். அரவது உடலை அடக்கம் செய்ய மேலூர் பள்ளி வாசலுக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
அப்போது ஹரீபா பேகத்தின் உடலை அடக்கம் செய்ய தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அடக்கம் செய்ய கூடாது என்று அனுமதி மறுத்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து டி.எஸ்.பி. மாறன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். ஹரீபா பேகத்தின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க போலீஸார் அறிவுறுத்தினர். மேலும் பிண அடக்கத்தைத் தடுத்த தமுமுகவினர் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications