கல்யாண மோசடி மன்னன் லியாகத்துக்கு ஜாமீன்
சென்னை: பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த லியாகத் அலிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பணமோசடி செய்ததாக லியாகத் அலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஜாமீன் கோரி லியாகத் அலி மீண்டும் உயர்நீதமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி சுதந்திரம் மனுவை விசாரித்தார். போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி,ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு உயர் பதவியில் இருப்பதாக கூறி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றார்.
லியாகத் அலி சார்பில் வழக்கறிஞர் அருண் ஆஜராகி, 110 நாட்களுக்கு மேலாக லியாகத் அலி சிறையில் உள்ளார். வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே அவருக்கு ஜாமீன் தர வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுதந்திரம், லியாகத் அலிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.