எம்.ஓ பணத்தை திருடிய தபால்காரர் சஸ்பென்ட்
குடியாத்தம்: விவசாயிக்கு வந்த உதவித் தொகை மணியார்டர் பணத்தைக் கையாடல் செய்த தபால்காரர் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த சேராங்கல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி. இவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகையாக ரூ.400 வழங்க உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடந்த 2007 செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த தொகை அவரது கைக்கு வந்து சேரவில்லை.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் சேராங்கல் கிராமத்தில் வருவாய் துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது கோவிந்தசாமிக்கு உதவி தொகை வழங்கப்படாதது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து நடந்த விசாரணையில் மசிகம் கிராம அஞ்சல் ஊழியர் ஞானசேகரன், கோவிந்தசாமிக்கு வழங்கப்பட்ட உதவி தொகையை கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பென்ட் செய்து தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.