சென்னையில் வணிகர் தின மாநாடு-விலைவாசி உயர்வுக்கு கண்டனம்
சென்னை: இன்று வணிகர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மாநாடு நடந்தது. இந்த மாநாடு விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடாக நடத்தப்படுவதாக என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் கூறியுள்ளார்.
சென்னை தீவுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் மாநாட்டு நடக்கிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான வணிகர்கள் சென்னையில் பங்கேற்றுள்ளனர்.
காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியதும் சாதிக்பாட்சா, வீரபத்திரன் ஆகியோர் சங்கக் கொடியை ஏற்றினர். பேரவை பொதுச் செயலாளர் மோகன் வரவேற்க நல்லிகுப்புசாமி செட்டியார், வசந்திதேவி, தனபாலன், சொக்கலிங்கம், ஜியாவுல்லாகான் ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.
விடுதலைத் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மாநாட்டை தொடங்கி வைத்தார். தலைவர் வெள்ளையன் தனது அறிமுக உரையில், இந்த வணிகர் தின மாநாடு விலைவாசி உயர்வு எதிர்ப்பு மாநாடாக நடத்தப்படுகிறது என்றார்.
விவசாயம் முதல் வியாபாரம் வரை என்ற தலைப்பில் பழ.கருப்பையா தலைமையில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
வெள்ளையன் தலைமையில் இன்று மாலை விலைவாசி உயர்வு கண்டன அரங்கம் நடக்கிறது. அகில இந்திய வியாபாரிகள் சம்மேளன தலைவர் ஷியாம் பிகாரி மிஸ்ரா தொடங்கி வைக்கிறார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் வரதராஜன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக பொது செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழ்தேச பொதுவுடமை கட்சி தலைவர் மணியரசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
வணிகர் தின மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்துள்ளனர். சென்னையிலும் பெரும்பாலன கடைகள் மூடப்பட்டுள்ளன. சங்கங்களை சாராத கடைகள் மட்டுமே திறந்திருந்துள்ளன.
இதனால் பெரம்பூர், தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், வியாசர்பாடி, ராயபுரம், பாடி உள்பட சென்னையின் முக்கிய வியாபார பகுதிகள் வெறிச்சோடி கிடக்கின்றன.












Click it and Unblock the Notifications