ஆயுதம் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ. 400 கோடி கடன்!

இது தொடர்பாக ஆங்கில பத்திரிக்கையில் வந்துள்ள செய்தியை ஆதாரமாகக் காட்டியுள்ள வைகோ, இந்த உதவியை உடனடியாக நிறுத்துமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் வைகோ கூறியிருப்பதாவது:
த எக்னாமிக் டைம்ஸ் நாளிதழின் 27ம் தேதி பதிப்பில் வெளியான ஒரு செய்தியில் இலங்கை ராணுவம் ஆயுதங்கள் வாங்க இந்தியா உதவுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
அந்த செய்தியில், இலங்கை ராணுவம், சீனா, பாகிஸ்தானில் ஆயுதங்கள் வாங்குவதற்காக இந்தியா மிக குறைவாக 2 சதவீத வட்டிக்கு ரூ. 400 கோடி கடன் கொடுப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை படித்ததும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் இந்த செய்தியை நான் நம்பவில்லை. ஆனால் இந்த செய்தி உண்மைதான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டபோது முழுமையாக உடைந்து போனேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி நான் உங்களை சந்தித்துப் பேசியபோது, இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் செய்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டை கூறினேன். அதை மறுத்த நீங்கள், இலங்கைக்கு இந்தியா ஒரு போதும் ஆயுத உதவி செய்யாது என்று உறுதி மொழி அளித்தீர்கள்.
இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்களை கொன்று குவித்து வருகிறது. கொழும்பில் ஐ.நா. சபை அலுவலகத்தை திறக்க அனுமதி மறுத்ததன் மூலமும், மனித உரிமை கமிஷன் தலைவர் மேடம் லூயிஸ் ஆர்வோரை இலங்கையின் வடக்கு மாகாணப் பகுதிக்கு அனுமதிக்காததன் மூலமும் தமிழர்கள் பாதிக்கப்படும் உண்மை சர்வதேச சமுதாயத்துக்கு தெரிய வந்தது.
அப்பாவி தமிழர் பெண்கள், குழந்தைகளை கொன்று, தமிழ் இனத்தை அழிக்க தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் சிங்கள ராணுவத்துக்கு பலம் சேர்ப்பதற்காக, ஆயுதங்கள் வாங்க இந்தியா நிதியுதவி செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது நீங்கள் அளித்த உறுதி மொழிக்கு முரணாக உள்ளது.
நான் இதற்கு முந்தைய கடிதங்களில் குறிப்பிட்டுள்ளது போல, சிங்கள ராணுவ தாக்குதலில் ஈழத் தமிழர்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்துக்கும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் பொறுப்பு ஏற்று பதில் சொல்ல வேண்டும்.
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உணவு மற்றும் மருந்து பொருட்கள் அனுப்ப மத்திய அரசு அனுமதிக்காததை பொறுத்துக் கொள்ள முடியாது. இது சர்வதேச சட்ட விதிகளுக்கு எதிரானது.
ஈழத் தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை கொடுக்க மறுக்கும் இந்தியா, இலங்கை ராணுவ ரீதியாக பலத்தை பெருக்கிக் கொள்ள ஏராளமாக நிதி உதவி செய்கிறது.
ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்தியா தன் வெளியுறவுக் கொள்கையை காற்றில் பறக்க விட்டு தவறுக்கு மேல் தவறு செய்வதாக நான் மிகுந்த மன வேதனையுடன் குற்றம் சாட்டுகிறேன்.
இலங்கைக்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவலையோடு கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கைக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த உதவியும் செய்யக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications