செக் மோசடி-ஸ்ரீதேவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: ரூ.10 கோடி செக் மோசடி வழக்கில் நடிகை ஸ்ரீதேவிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
திரைப்படம் தயாரிப்பதற்காக ரூ.10 கோடிக்கு 3 செக்குகளை கொடுத்து நடிகை ஸ்ரீதேவி கடன் வாங்கியிருந்ததாகவும், அந்த செக்குகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா பைனான்சியர்கள் மது குப்தா, சுசில் குப்தா ஆகியோர் குர்லா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் குர்லா நீதிமன்றம் ஸ்ரீதேவிக்கு சம்மன் அனுப்பியது.
இந்நிலையில் தனது கணவர் போனி கபூர், வியாபார விஷயமாக கையெழுத்திடாத சில செக்குகளை அந்த பைனான்சியர்களிடம் கொடுத்திருந்தார். அவற்றில் என்னை போலவே போலியாக கையெழுத்து போட்டு பைனான்சியர்கள் மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஜுஹூ போலீசில் ஸ்ரீதேவி புகார் செய்தார்.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்திலும் ஸ்ரீதேவி வழக்குத் தொடர்ந்தார்.
இதையடுத்து குர்லா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி மீதான வழக்கு விசாரணைக்கு கடந்த மார்ச் 26ம் தேதியன்று மும்பை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும், ஸ்ரீதேவி கொடுத்த புகாரை 3 மாதங்களில் விசாரித்து முடிக்குமாறு ஜுஹூ போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பைனான்சியர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், இதுதொடர்பாக பதிலளிக்குமாறு ஸ்ரீதேவிக்கும், மஹாராஷ்டிர அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.