தசாவதாரம் சர்ச்சைக் காட்சிகள்: இந்து முன்னணி கண்டனம்
சென்னை: தசாவதாரம் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் படத்தைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 10 வேடங்களில் கமலஹாசன் நடிக்கும் சாவதாரம் திரைப்படத்தில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருக்கிறார்கள். இதில் கோவிலில் இருந்த சாமி சிலைகள் சேதப்படுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.
இதன்மூலம் இந்து சமுதாயத்தை மேலும் பலவீனமாக்க முடியும் என்பதால் தமிழக முதல்வர் கருணாநிதி மிகுந்த மகிழ்ச்சியடைந்து தன்னால் செய்ய முடியாததை கமலஹாசன் மூலம் சாதிக்க முயலுகிறார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
மாலிக்காபூர் படையெடுப்பு காலத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் தாக்கப்பட்டது. அங்கிருந்த சிலைகள் உடைக்கப்பட்டன. இந்த அட்டூழியங்களையும், முஸ்லிம்கள் தங்கள் கோவிலையும் தாக்குவார்கள் என்று எண்ணி ஸ்ரீரங்கப் பெருமானை காப்பாற்றிக் கொள்ள 43 ஆண்டுகள் சாமி சிலைகளை வைணவர்கள் தூக்கிக் கொண்டு சென்ற வரலாற்றுச் சம்பவங்களை எல்லாம் படமாக எடுக்க கமலஹாசனுக்கு துணிவு உண்டா? அப்படி எடுத்தால் முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்வார்களா? தமிழக அரசும், திரைப்படத் தணிக்கை துறையும் தான் அனுமதிக்குமா?.
எனவே, சர்ச்சைக்குரிய திரைக் காட்சிகளை சினிமாவில் அனுமதிக்கக் கூடாது. நீக்க வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் தசாவதாரம் திரைப்படத்தை பக்தர்கள், பொதுமக்கள் துணைகொண்டு, இந்து முன்னணி போராடி தடுக்கும். தமிழகத்தில் எங்கும் திரையிட விடமாட்டோம்.
மேலும், பாடல் கேசட் வெளியீட்டு விழாவில் மல்லிகா ஷெராவத் என்ற நடிகை அரைகுறை ஆடையுடன் பங்கேற்றது பற்றி நடந்து வரும் சர்ச்சையில் உடை அணிவது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று வாதாடுவது தமிழ் கலாசாரத்தை சீரழிக்கும். இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறும் அதிகாரிகள், அரசு ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கோவணம் கட்டிக் கொண்டு போராட்டம் நடத்தியபோது அவர்களை கைது செய்தது ஏன்?
சமண மடத்துறவிகள் தங்கள் மத சம்பிரதாயப்படி உடையின்றி வந்தபோது பெரும் கூச்சலும், எதிர்ப்பும், ஆர்ப்பாட்டங்களும் தூண்டிவிடப்பட்டன. இப்படியிருக்க ஆண் நடிகர்களோ, பொதுமக்களோ கோவணத்தோடு வந்தால் அதை எப்படி ஆட்சேபிக்க முடியும். உடை விஷயத்தில் பாரம்பரியமாக பின்பற்றி வரும் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறிய வீராங்கனை பி.டி. உஷாவுக்கு பாராட்டுகள் என்று கூறியுள்ளார் ராம. கோபாலன்.