புலிகள் இயக்க முக்கியத் தலைவர் சாந்தன் பிரிட்டனில் கைது
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவர்தான் ஏ.சி.சாந்தன். மறைந்த ஆன்டன் பாலசிங்கத்துடன் இணைந்து லண்டனில் செயல்பட்டு வந்தார்.
நார்வே அமைதிக் குழுவின் முயற்சியால் ஜெனீவாவில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பாலசிங்கத்துடன் சாந்தனும் கலந்து கொண்டார்.
கடந்த 2007ம் ஆண்டு ஜூன் 28ம் தேதி சாந்தனை லண்டன் போலீஸார் கைது செய்தனர். பின்னர் நவம்பர் 22ம் தேதி அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவர் திடீரென கைது செய்யப்பட்டார்.
வில்ட்ஷயர் போலீஸார், ஸ்வின்டன் என்ற இடத்தில் நடந்த சோதனையின்போது சாந்தனைக் கைது செய்தனர்.
தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, ஆயுதம் வாங்க பணம் திரட்டியதாக சாந்தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி லண்டனில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து தற்போது சாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாந்தனின் மனைவியும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனியும் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சாந்தனின் இயற்பெயர் அருணாச்சலம் கிறிசாந்தகுமார். இவருக்கு வயது 51.