விமான நிலையத்தில் மோதல்-'பவர் கட்'!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் மேலாளரைக் கண்டித்து ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின்போது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை விமான நிலைய போலீஸாருக்கு விமான நிலைய மேலாளர் சுப்பையா இரவு 8 மணியளவில் தொலைபேசி மூலம் ஒரு தகவல் கொடுத்தார். விமான நிலையத்தில் இருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில், ஸ்பானர் சகிதம் உள்ளனர். அவர்கள் தீவிரவாதிகளாக இருக்கக் கூடுமோ என்று சந்தேகமாக உள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்து அந்த இருவரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் ஜெய்கணேஷ், செல்வம் என்ற அவர்கள் இருவரும், முக்கியப் பிரமுகர்கள் அறையில் ஏசி ரிப்பேர் என்று கூறியதால் பழுது பார்க்க வந்ததாகவும் கூறினர். மின்சாரப் பிரிவு கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர்தான் தங்களை அழைத்து வந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்கள் கூறுகையில், எங்களது வேலையை முடித்து விட்டுக் கிளம்பும்போது மேலாளர் சுப்பையா வந்து எனது வீட்டில் ஏசி பழுதாகியிருப்பதாகவும், வந்து சரி பார்த்து விட்டுச் செல்லுமாறும் கூறி அழைத்தார். அதற்கு நாங்களாக வர முடியாது. எங்கள் நிறுவனத்திற்குக் கூறினால் அவர்கள் சொன்னால்தான் நாங்கள் வர முடியும் என்று கூறினோம்.
இதனால் ஆத்திரமடைந்த சுப்பையா எங்கள் மீது தீவிரவாதிகள் முத்திரை குத்திப் பழிவாங்க பார்க்கிறார் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த விஜயபாஸ்கருக்கும், சுப்பையாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மின்சாரப் பிரிவு ஊழியர்கள் அங்கு வந்து தகராறில் இறங்கினர். மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பும் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டது.
உடனடியாக விமான நிலைய ஆணைய அதிகாரி மணிராம் வந்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். சுப்பையா மீது தவறு இருப்பது தெரிய வந்ததால் அவர் உடனடியாக நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
மின்சாரப் பிரிவு ஊழியர்கள் மின்சாரத்தைத் துண்டித்ததால் கிட்டத்தட்ட கால் மணி நேரம் விமான நிலையத்தில் மின்சாரம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரும் பதட்டமடைந்தனர்.












Click it and Unblock the Notifications