தமிழகத்தில் மீண்டும் கொத்தடிமைகள் கணக்கெடுப்பு
திருச்சி: தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர் மறு கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. கண்டறியப்படும் கொத்தடிமைகளுக்கு உடனடி நிவாரணமாக ரூ.20,000 வழங்கப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள் குறித்த மறு கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
திருச்சியில் இந்த கணக்கெடுப்புக்கான பயிற்சியை ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் தங்க கலியபெருமாள் இன்று தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழகத்தில் செங்கல் சூளை, அரிசி ஆலை உள்பட 20 தொழில்களில் கொத்தடிமை முறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலை, செங்கல் சூளைகளில் குழந்தைகள் உள்பட ஏராளமான கொத்தடிமை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கொத்தடிமை தொழிலாளர்களை அமர்த்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிக்க பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
மீட்கப்படும் கொத்தடிமை தொழிலாளருக்கு உடனடி நிவாரணமாக ரூ.1000ம், மறுவாழ்வு நிவாரணமாக ரூ.19,000ம் வழங்கப்படும். இதுதவிர அவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, குழந்தைகளுக்கு கல்வி உதவி போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கப்படும்.
கடந்த 1990ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எடுக்கப்பட்ட முதல் கணக்கெடுப்பில் 13,609 கொத்தடிமைகள் கண்டறியப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்காக தலா ரூ.19,000 வழங்கப்பட்டது. கொத்தடிமைகள் மறுவாழ்வுக்காக 1996-97 ஆண்டில் இருந்து இதுவரை ரூ.16.54 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் கொத்தடிமைகள் கணக்கெடுப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிக்காக ரூ.60 லட்சமும், கணக்கெடுப்பை சரிபார்க்க கூடுதலாக ரூ. 15 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு துறையினருடன் தொண்டு நிறுவனங்களும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரண்டு மாதங்களுக்குள் கணக்கெடுப்பு முடிவடையும். ஆனால் சில தொண்டு நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கேட்டுள்ளதை பரிசீலிப்போம் என்றார்.