பிரியங்கா-நளினி சந்திப்பு: 'சட்டப்படி' தகவல் தரமுடியாது- சிறைஅதிகாரி
சென்னை: பிரியங்கா - நளினி சந்திப்பு குறித்த விவரங்களை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பதில் தர இயலாது என்று வேலூர் சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா கடந்த மார்ச் மாதம் 19-ந் தேதி வேலூர் சென்று சிறையில் இருக்கும் நளினியை சந்தித்ததாக தகவல்கள் வந்தன. இதை பிரியங்காவும், ராகுல்காந்தியும் ஒப்புக் கொண்டனர்.
ஆனால் இருவரும் சந்தித்துக்கொண்ட இடம் சிறையில்லை, வேறு இடம் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக ஒரு குண்டைப் போட்டார்.
இந்நிலையில் பிரியங்காவும், நளினியும் வேலூர் சிறையில் சந்தித்தது உண்மைதானா என்பதை அறிய சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த ராஜ்குமார் வேலூர் மத்திய சிறைச்சாலைக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தார். இதற்கு, சிறை கண்காணிப்பாளர் ராஜசவுந்தரி மார்ச் மாதம் 19 அன்று நளினியை யாரும் சிறையில் சந்திக்கவில்லை என்று பதில் அனுப்பினார்.
இதையடுத்து, தனது மனுவுக்கு பொய்யான தகவலை கண்காணிப்பாளர் ராஜசவுந்தரி தெரிவித்துள்ளார் என்று ராஜ்குமார் வக்கீல்கள் எஸ்.துரைசாமி, வி.இளங்கோவன் ஆகியோர் மூலம் சென்னையில் உள்ள மாநில தகவல் உரிமை சட்ட ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். அவர் மீது தகவல் உரிமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மனுவில் கோரியிருந்தார். இந்த மனு இன்னும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் 28.04.2008 தேதியிட்ட ஒரு பதில் கடிதத்தை ராஜ்குமாருக்கு கண்காணிப்பாளர் ராஜசவுந்தரி அனுப்பியுள்ளார்.
இரண்டாவது முறையாக அனுப்பப்பட்ட அந்த பதில் கடிதத்தில் கண்காணிப்பாளர் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச் 19 அன்று ஆயுள் தண்டனை கைதி நளினிக்கும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மகளான பிரியங்காவுக்கும் சந்திப்பு இந்த சிறையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு தமிழ்நாடு சிறை நடைமுறை சட்டம் இரண்டாவது விதி எண்.520, 522 மற்றும் 526-ல் தெரிவித்துள்ள விதிகளுக்கு இணங்க நடத்தப்பட்டது.
மேலும் தாங்கள் மனுவில் கூறப்பட்டுள்ளபடி தகவல் பெறும் உரிமை சட்டம் 8(1)(ஜி)படி வழங்க இயலவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவர்களது சந்திப்பு குறித்து விவரங்கள் அவசியம் தேவையெனில் சிறையில் இருக்கும் நளினியை நேரில் சந்தித்து (நளினி தங்களை நேர்காணல் காண விருப்பம் தெரிவித்தால் மட்டும்) விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கண்காணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதத்தை பெற்றுக் கொண்ட டி.ராஜ்குமார் நேற்று சிறை கண்காணிப்பாளர் ராஜசவுந்தரிக்கு மீண்டும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தாங்கள் எழுதிய கடிதம் எனக்கு கிடைத்தது. ஏற்கனவே நீங்கள் அனுப்பிய கடிதத்தில் நளினியை 19.03.2008 அன்று யாரும் நேர்காணல் பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் தற்போதைய அக்கடிதத்தில் பிரியங்கா நளினியை சந்தித்ததாக தெரிவித்துள்ளீர்கள். இதில் எது பொய்? எது உண்மை?
இதில் ஏதோ ஒன்று பொய்யான தகவல்.
சிறை விதிமுறைப்படி சிறைக்குள் செல்லும் நபர்கள் உள்ளே செல்லும் நேரம், வெளியேறும் நேரத்தை வருகை பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.இதை மேற்பார்வையிட்டு சரியாக இருந்தால் கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும். சிறைக்குள் நளினியை பிரியங்கா சந்தித்தது உண்மை என்றால் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட விவரத்தை ஜெராக்ஸ் நகல் எனக்கு தர வேண்டும்.
அப்படி பதிவு செய்யவில்லை என்றால் அதற்கான காரணத்தை எனக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், சந்தித்த விவரங்கள் குறித்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வழங்க தடையில்லை. அதனை நீங்கள் தர மறுப்பது சட்டப்படி தவறானதாகும். மேலும் பொதுத் தகவல் அலுவலராகிய உங்களிடம்தான் விவரங்கள் கேட்டேனே தவிர சிறைவாசி நளினியிடம் விவரங்களை பெற்றுக் கொள்ள தங்களின் அறிவுரை தேவையில்லை.
அதனால் முழுமையான தகவலை நீங்கள்தான் தர வேண்டும். இந்த தகவல்களை தாங்கள் தெரிவிப்பதற்காக தகவல் அறியும் சட்டப்படி நான் ரூ.10-க்கு டிமாண்ட் டிராப்ட் இதனுடன் இணைத்துள்ளேன்.
இவ்வாறு ராஜ்குமார் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications