தடுப்பூசி போடப்பட்ட குழந்தை கவலைக்கிடம்
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் தடுப்பூச்சி போட்டுக் கொண்ட நான்கு பச்சிளம்குழந்தைகள் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் ஆரம்ப சுகாதார மையத்தில் பலத்த முன்னெச்சரிக்கையுடன் தடுப்பூசி போடும் பணி தொடரும் என அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் பிசிஜி மற்றும் டிபிடி தடுப்பூசி போடப்பட்ட 2 மாதமே ஆன பெண் குழந்தை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
செல்வதர்ஷினி என்கிற அந்தக் குழந்தைக்கு ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று தடுப்பூசி போடப்பட்டது. நேற்று நள்ளிரவுக்கு மேல் குழந்தையின் வாயில் நுரை தள்ளியது. இதையடுத்து காதுகளிலும், மூக்கிலும் ரத்தம் கொட்டத் தொடங்கியது.
பதறிப் போன குழந்தையின் பெற்றோர் உடனடியாக வெள்ளமடம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு குழந்தையைக் கொண்டு சென்றனற். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.