திமுகவைச் சேர்ந்த விஜய்-சிம்பு ரசிகர்கள் மோதல்- ஒருவருக்கு வெட்டு!
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக இளைஞரணியைச் சேர்ந்த விஜய் மற்றும் சிம்பு ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிம்பு ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த ஒருவரை காருக்குள் அடித்தபடியே நகரை வலம் வந்தனர் விஜய் மன்றத்தைச் சேர்ந்தவர்கள்.
தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தை சேர்ந்தவர் சிம்பு நடராஜன். இவர் மாவட்ட சிம்பு மன்ற செயலாளராகவும், தூத்துக்குடி நகர திமுக மாணவரணி அமைப்பாளராகவும் உள்ளார். இவருடைய நண்பர் சண்முகபுரத்தை சேர்ந்த முத்துதுரை. நகர திமுக இளைஞரணி துணை அமைப்பாளராகவும் உள்ளார்.
தூத்துக்குடி விஜய் ரசிகர் மன்ற தலைவர் பில்லா ஜெகன். இவர் நகர திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ளார்
இந்த நிலையில் சிம்பு நடராஜனும், முத்துத்துரையும் மற்றும் கட்சி நிர்வாகிகளும் சேர்ந்து தூத்துக்குடியை மாநகராட்சியாக அறிவித்ததற்கு திமுக அரசுக்கு நன்றி தெரிவித்து குரூஸ் பர்னாந்து சிலை அருகே பெரிய டிஜிட்டல் போர்டு வைத்திருந்தனர்.
இதை பில்லா ஜெகனும் அவரது தம்பிகள் சுமன், சிம்மன்ஸ், செல்வம் ஆகிய 4 பேரும் அகற்றிவிட்டு குருவி பட டிஜிட்டல் போர்டை வைத்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சிம்பு நடராஜனும், அவரது நண்பர் சண்முகபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோர் தாங்கள் வைத்த டிஜிட்டல் போர்டை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே சிம்பு நடராஜனையும், சுரேஷையும் அவர்கள் அடித்து உதைத்தனர். பின்னர் ஒரு காரில் சிம்பு நடராஜனை மட்டும் தூக்கி போட்டு கொண்டு காருக்குள்ளேயே வைத்து கம்புகளாலும், கைகளாலும் அடித்து உதைத்தவாறே நகரை வலம் வந்தனர்.
சுமார் ஒரு மணி நேரம் அடித்து முடித்த பின்னர் குரூஸ் பர்னாந்து சிலை அருகே அவரை விட்டு விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து சிம்பு நடராஜன் கோஷ்டியை சேர்ந்த சுரேஷ், முத்து துரை, ஆல்பர்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து பில்லா ஜெகனை தாக்கினர். இதில் பில்லா ஜெகன் தம்பிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
படுகாயமடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து இரு தரப்பினரும் தூத்துக்குடி மத்திய பாகம் போலீசில் புகார் செய்தனர்.
சிம்பு நடராஜன் அளித்த புகாரின் பேரில் பில்லா ஜெகன், சுமன், சிம்மன்ஸ், செல்வம் ஆகியோர் மீதும், பில்லா ஜெகன் அளித்த புகாரின் பேரில் சிம்பு நடராஜன், சுரேஷ், முத்துதுரை, ஆல்பர்ட் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இதில் சிம்பு நடராஜன் கோஷ்டியை சேர்ந்த சுரேஷ், பில்லா ஜெகன் கோஷ்டியை சேர்ந்த சுமன் கைது செய்யப்பட்டனர்.
திமுகவைச் சேர்ந்தவர்களே இரு நடிகர்களின் ரசிகர்களாக பிரிந்து மோதிக் கொண்டது அந்தக் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.