திருச்சி, திண்டுக்கல்லில் கன மழை-பெண் பலி
திருச்சி: திருச்சி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும், திண்டுக்கல்லிலும் பெரும் மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்தது.
தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திர வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. பல்வேறு நகரங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் திருச்சி மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென கன மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த இந்த கன மழையால் நகரமே ஸ்தம்பித்தது. வெப்ப நிலை சட்டென குறைந்து குளுமை நிலவியது.
திருச்சி நகரில் 96.5 மில்லி மீட்டர் மழையும், திருச்சி விமான நிலையத்தில் 53.8 மில்லிமீட்டர் மழையும், குளித்தலையில் 29 மில்லிமீட்டர் மழையும் பெய்தது.
கன மழை காரமமாக சென்னை - திருச்சி ஏர் டெக்கான் விமானம், திருச்சி விமான நிலையத்தில் இறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.
மின்னலுக்கு பெண் பலி:
இதேபோல, திண்டுக்ககல் அருகே இடியுடன் கூடிய மழை, மற்றும் மின்னல் தாக்கியதில் ஒரு பெண் பலியானார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் கோர தாண்டவம் ஆடியது. மாலை 4.30 மணி அளவில் குளிர் காற்று வீசியது. அதைத் தொடர்ந்து கன மழை பெயந்தது.
திண்டுக்கல்லை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான மரங்கள் மழைக்கு சாய்ந்தன. பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழையின்போது மின்னலும் இருந்ததால் திண்டுக்கல் நகரில் மின் தடை ஏற்பட்டது.
பாடியூர் புதுப்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி ஈஸ்வரி தனது தோட்டத்தில் இருந்த போது மின்னல் தாக்கி அவர் இறந்தார்.