அட்சய திரிதியை- அலைமோதிய கூட்டம்
சென்னை: அட்சய திருதியையை முன்னிட்டு நேற்று நகை வாங்க கூடிய கூட்டம் இன்றும் நகைக் கடைகளில் அலை மோதியது.
நேற்றும், இன்றும் அட்சய திரிதியை தினமாகும். அதிலும் இன்றுதான் விசேஷமான தினம். இதனால் நகை வாங்க மக்கள் கூட்டம் நகைக் கடைகளில் அலை மோதியது.
இந்த ஆண்டு நகை விலை மிகவும் கடுமையாக இருப்பதால் நேற்றைய தினம் நகை வாங்க பெரிய அளவில் கூட்டம் இல்லை. அதேசமயம், இன்று நகைக் கடைகளில் திருவிழாக் கூட்டத்தைக் காண முடிந்தது.
குண்டுமணி நகையாவது வாங்க வேண்டும் என்ற மக்களின் எண்ணத்தால் இன்று நகைக் கடைகளில் விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் அலை மோதியது.
அட்சய திருதியையை முன்னிட்டு சென்னை தி.நகர், புரசைவாக்கம், என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது.
இதற்காக நகைக்கடைகளில் கூடுதல் ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு, கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பெண்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அட்சய திருதியை 2 நாட்கள் கொண்டாடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 40 டன் வரை தங்கம் விற்பனையாகியிருக்கலாம் என உலக தங்க கவுன்சில் நிர்வாக இயக்குனர் அஜய் மித்ரா தெரிவித்துள்ளார். இன்றும் சேர்த்து 70 கிலோ தங்கம் விற்பனையாகியிருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
நகைக் கடைகள் தவிர வங்கிகளில் தங்க நாணயங்களும் விற்கப்பட்டன. இரண்டரை கிராம், 5 கிராம், 10 கிராம், 20 கிராம் மற்றும் 50 கிராம் எடைகளில் தங்க காசுகள் விற்பனை செய்யப்பட்டது.