மதுரையில் புஷ் கொடும்பாவி எரிப்பு-ஆம்வே ஊழியர்கள் சிறைபிடிப்பு
மதுரை: இந்தியர்கள் சத்தான உணவு சாப்பிடுவதாக கூறிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைக் கண்டித்து மதுரையில் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட ஆம்வே நிறுவனத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரரர்கள், அங்கிருந்த ஊழியர்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகளவில் உணவு பொருட்கள் விலை உயர்ந்துள்ளதற்கு, இந்தியர்களின் உணவு பழக்க வழக்கம் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியர்களை தரக்குறைவாகவும், அவமரியாதை செய்யும் விதத்திலும் பேசிய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் ஜார்ஜ் புஷைக் கண்டித்து மதுரை கே.புதூரில் உள்ள ஆம்வே நிறுவனத்தை தமிழ்நாடு வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள், அதன் தலைவர் சின்னராசு தலைமையில் முற்றுகையிட்டனர்.
அங்கு பணியில் இருந்த ஊழியர்களை உள்ளே வைத்து வெளியில் கதவை பூட்டினர். மேலும் ஜார்ஜ் புஷ் உருவப்படத்தை ரோட்டில் போட்டு எரித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் கொடும்பாவியை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.