கோவை ரயிலைக் கவிழ்க்க சதி-பயணிகள் தப்பினர்
கோவையிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. காலை 8.10 மணிக்கு இந்த ரயில் மேட்டுப்பாளையத்தில் கிளம்பி, 9.20 மணிக்கு கோவை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மாலை 5.50 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி, 7.10 மணிக்கு மேட்டுப்பாளையம் போய்ச் சேரும்.
கோவை பாசஞ்சர் தவிர, சென்னையிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும், மேட்டுப்பாளையம் வருகிறது. இந்த ரயில்கள் வருவதற்கு முன்பும், போவற்கு முன்பும், விரிவான சோதனை செய்யப்படுவது வழக்கம்.
நேற்றும் காலையில், ரயில்வே ஊழியர் சீனவாசன், காரமடை - பெரியநாயக்கன் பாளையம் இடையே தண்டவாளத்தை சோதனையிட்டார். அப்போது கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் பிஷ் பிளேட்டுக்கள் கழற்றப்பட்டிருப்பதைப் பார்த்து திடுக்கிட்டார்.
அப்போது கோவை பாசஞ்சர் ரயில் காரமடை ரயில் நிலையத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தது. ரயிலைப் பார்த்த சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது கையில் இருந்த சிவப்புக் கொடியை எடுத்து அசைத்தார். இதையடுத்து ரயில் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்திலிருந்து ரயில் தப்பியது.
பின்னர் ரயில்வே பொறியாளர்கள், உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிஷ் பிளேடு கழற்றப்பட்டிருந்த இடத்தில் புதிய இரும்புத் தகடு பொருத்தப்பட்டு தண்டவாளம் இணைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் புறப்பட்டுச் சென்றது.
இது சதி வேலை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். மொத்தம் 5 இடங்களில் இதுபோல பிஷ் பிளேட்டுக்கள் கழற்றப்பட்டுள்ளன. இந்த சதி வேலையில் ஈடுபட்டது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.