ஏர்போர்டிலேயே விரைவில் இந்திய சுற்றுலா விசா- அமைச்சர் தகவல்
துபாய்: விசா கொள்கையில் அதிரடி மாற்றமாக இந்திய விமான நிலையங்களிலேயே வெளிநாட்டு பயணிகளுக்கு சுற்றுலா விசா வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய சுற்றுலா துறை இணை அமைச்சர் காந்தி சிங் அறிவித்துள்ளார்.
துபாயில் ஏடிஎம் சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொண்ட அமைச்சர் காந்தி சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்திய விமான நிலையங்களில் வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளுக்கு அங்கேயே சுற்றுலா விசா வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த முறை அமல்படுத்தப்படும். இந்தியாவுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகளைக் கவருவதற்காக இந்த ஏற்பாடு.
தற்போது இந்தியா வரவிரும்பும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்தின் மூலமாகவே விசா பெற முடியும். ஐந்தாண்டுகளுக்குள் எத்தனை முறைவேண்டுமானாலும் இந்தியாவுக்கு வந்து செல்ல அனுமதிக்கும் விசா முறையை 18 நாடுகளுக்கு ஏற்கெனவே அறிமுகப்படுத்தியுள்ளோம். இதன்படி, தொடர்ச்சியாக 90 நாட்கள்வரை இந்தியாவில் தங்கலாம். பின்னர் கிளம்பிச்சென்றுவிட்டு மீண்டும் இதேபோல வந்து தங்கலாம். ஐந்தாண்டுகளுக்கு இந்த வசதியை பயன்படுத்தலாம்.
இந்தியாவில் சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. டிரெக்கிங் போன்ற சாகஸ சுற்றுலா, மருத்துவச் ற்றுலா மற்றும் கிராமிய, ஷாப்பிங் சுற்றுலா என பலவகையான புதிய சுற்றுலாக்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முக்கிய தலங்களில் சுற்றுலா போலீஸாரை நியமிக்கும்படி அனைத்து இந்திய மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.