திருப்பதி தேவஸ்தான தங்கும் விடுதியில் தீ விபத்து
திருப்பதி: திருப்பதி திருமலையில் உள்ள தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பத்மாவதி தங்கும் விடுதியில் பூட்டியிருந்த ஒரு அறையில் இருந்து இன்று புகை வந்தது.
சிறிது நேரத்தில் பெரும் சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீப் பிடித்துக் கொண்டது.
வெடிச் சத்தத்துடன் அறை தீப்பிடித்து எரிந்ததால் குண்டு வெடித்துவிட்டதாகக் கருதி பக்தர்கள் பீதியால் அலறியபடி ஓட்டம் பிடித்தனர்.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து அந்த அறையை உடைத்து உள்ளே சென்று 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.
திருப்பதி தேவஸ்தான சிறப்பு அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி சம்பவம் நடந்த அறையை பார்வையிட்டார்.
மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. அறையில் இருந்த மின்சார கருவிகள் வெடித்தது தான் குண்டு வெடித்தது போன்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது.