சிறுவன் கொலை-சிறுமி கற்பழித்து கொலை: கொலையாளிகள் வீடுகள் சூறை
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் சிறுவனும் சிறுமியும் கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். தன்னை போலீசில் காட்டிக் கொடுத்த குடும்பத்தை பழி வாங்க இந்த கொடூர கொலைகளை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் தமிழக-ஆந்திர மாநில எல்லையில் ஊத்துக்கோட்டை அருகே உள்ளது நாகலாபுரம். இங்குள்ள ராஜீவ் காந்தி நகர் முஸ்லிம் காலனியைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகன் வாசிம் அக்ரம் (9), மகள் ஷமீலா (7).
கடந்த 7ம் தேதி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த வாசிம் அக்ரம், ஷமீலா இருவரும் திடீரென காணாமல் போயினர். நாகலாபுரம் போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில் சுல்தான் வீட்டின் அருகில் வசித்து வந்த வெங்கடேசலு என்பவர் மாயமானார்.
அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த அவரை கிராம மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் வெங்கடேசலுவிடம் விசாரித்தபோது வாசிம் அக்ரம், ஷமீலா ஆகியோரை தனது நண்பர் நூர் பாஷா என்பவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக திடுக்கிடும் தகவல் தந்தார்.
சுல்தானின் வீட்டருகே வசித்து வந்த நூர் பாஷாவின் முதல் மனைவி கடந்த 2001ம் ஆண்டு குடும்பத் தகராறு காரணமாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து 5 வருடம் தலைமறைவாக இருந்த நூர் பாஷா திடீரென ஒரு நாள் சுல்தான் வீட்டுக்கு வந்துள்ளார்.
இது குறித்து சுல்தானின் தந்தை போலீசுக்கு தகவல் தரவே நூர் பாஷா கைது செய்யப்பட்டார். ஆனால், நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் குற்றச்சாட்டு சரியாக நிரூபிக்கப்படாததால் நூர் பாஷா விடுதலையாகிவிட்டார்.
ஆனாலும் தன்னை போலீசில் காட்டிக் கொடுத்த சுல்தான் குடும்பத்தை பழிவாங்க வெங்கடேசலுவுடன் சேர்ந்து வாசிம் அக்ரம், ஷமீலா இருவரையும் காட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு நூர்பாஷா, வெங்கடேசலு இருவரும் சேர்ந்து சிறுவன் வாசிம் அக்ரமை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
சிறுமி ஷமீலாவை இருவரும் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
இருவரின் உடல்களையும் காட்டிலேயே வீசிவிட்டு நூர் பாஷா நெல்லூரில் உள்ள தனது 2வது மனைவியின் வீட்டுக்கு சென்று விட்டார். வெங்கடேசலு காட்டிலேயே பதுங்கி இருந்துள்ளார்.
இந் நிலையில் தான் வெங்கடேசலுவை கிராம மக்களே பிடித்துள்ளனர். அவர் தந்த தகவலின்பேரில் நூர் பாஷாவும் கைது செய்யப்பட்டார்.
மக்கள் ஆத்திரம்-வீடுகள் சூறை:
அப்பாவி சிறுவனும் சிறுமியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தகவலை அறிந்த கிராம மக்கள் ஆத்திரம் அடைந்து நூர் பாஷா, வெங்கடேசலு இருவரின் வீடுகளையும் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மேலும் இந்தக் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து முழு அடைப்பு போராட்டமும் நடந்து வருகிறது. இச் சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications