ஊட்டி மலைரயில் பழுது: சரிபார்க்க சென்ற 2 ஊழியர்கள் பலி
குன்னூர்: இன்ஜின் கோளாறு காரணமாக நடுகாட்டில் நின்ற ஊட்டி மலை ரயிலை சரி செய்யச் சென்ற ஊழியர்கள் டிராலி கவிழ்ந்து 2 பேர் பலியாயினர். 6 பேர் படுகாயமடைந்தனர்.
நடுக்காட்டில் பழுதாகி நின்ற ஊட்டி மலை ரயில் இன்ஜினை சரி செய்ய ஒரு டிராயிலியில் 9 ரயில்வே ஊழியர்கள் சென்றனர். நீலகிரி மலையில் சாந்திபுரம் என்ற பகுதியில் டிராலி வந்தபோது தீடீரென்று நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்தது. அப்போது உயிர்தப்புவதற்காக டிராலியில் இருந்து வெளியே தாவிய 2 ஊழியர்கள் அதலபாதாள பள்ளத்தில் போய் விழுந்தனர். உடலில் பலத்த காயமடைந்த இருவரும் அதேஇடத்தில் பரிதாபமாக பலியாயினர்.
டிராலி கவிழ்ந்தபோது வெளியில் தூக்கியெறியப்பட்ட 6 ஊழியர்கள் படுகாயமடைந்த நிலையில் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முன்னதாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை செல்லும் ஊட்டி மலை ரயில் நேற்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளைத்தில் இருந்து புறப்பட்டது. இந்த ரயிலில் 273 பயணிகள் இருந்தனர்.
குன்னூர் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்தபோது ஆடர்லி ரயில் நிலையம் அருகே இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அடர்ந்த காட்டுப் பகுதியில் ரயில் நின்றது. உடனடியாக அங்கு வந்த ஊழியர்கள் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது.
இதனால் பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து பயணிகள் அனைவரும் அங்கிருந்து கல்லார் பகுதிக்கு நடந்து அழைத்து செல்லப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து மற்றொரு ரயில் இன்ஜின் வரவழைக்கப்பட்டு மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு ரயில் கொண்டு செல்லப்பட்டது.
இன்ஜினி பழுதுபார்க்கச் சென்ற ஊழியர்களும் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications