தமிழகத்தில் சிறு, குறு தொழிற்சாலைகளுக்கு வாட் வரி விலக்கு
சென்னை: தமிழகத்தில் தொழில் தொடங்கும் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு மதிப்பு கூட்டு வரி விலக்கு உள்ளிட்ட பல சலுகைகளை அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியான அரசு உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் மிகச் சிறிய, சிறிய, நடுத்தர தொழில்கள் தொடங்கலாம். ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்து தொழில் தொடங்குவோருக்கு 15 சதவீதம் முதலீட்டில் மானியம் வழங்கப்படும்.
குறைந்த அழுத்த மின்சாரத்தை பயன்படுத்த 3 ஆண்டுகளுக்கு 20 சதவீதம் சலுகை அளிக்கப்படும். தொழில் தொடங்கும்போது 100 சதவீதம் வாட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
புதிய தொழிற்சாலை தொடங்க நிலம் வாங்க பத்திரப் பதிவில் இருந்து 50 சதவீதம் சலுகை வழங்கப்படும். காப்புரிமை மற்றும் டிரேடு மார்க் பதிவு செய்ய 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த செலவில் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications