காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த பஞ்.தலைவர் தம்பி படுகொலை
திருச்சி: தேர்தல் முன் விரோதம் காரணமாக பஞ்சாயத்து தலைவரையும் அவரது தம்பியையும் போலீஸ் நிலையத்துக்குள் வைத்து திமுக பிரமுகர் மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து வெட்டினர். இதில் பஞ்சாயத்து தலைவரின் தம்பி இறந்தார்.
திருச்சி அருகே உள்ள ஜீயபுரம் பெரிய கருப்பூர் மேக்குடி பஞ்சாயத்து தலைவர் ராமச்சந்திரன். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஆண்டிக்கும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் பொது குழாயில் குடிநீர் விநியோகிப்பது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் பழுதான குடிநீர் குழாயை மாற்றி புதிய குழாய்க்கு ராமச்சந்திரன் ஏற்பாடு செய்தார். இதையறியாத ஆண்டி, தனது மகன்கள் மோகன்ராஜ், ரமேஷ், சுரேஷ்குமார் ஆகியோர் அவரது ஆதரவாளர்கள் 20 பேருடன் ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்தனர்.
குடிநீர் பைக் சரி செய்யப்பட்டது தொடர்பாக ஆண்டிக்கும் ராமச்சந்திரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆண்டி தரப்பு ராமச்சந்திரனின் வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடியது.
திடீரென்று ஆண்டியும் அவரது மகன்களும் ராமச்சந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த அவரது சகோதரர்கள் மகேந்திரன், கார்த்திக், அக்கா மகன்கள் ராஜூ, முருகானந்தம் ஆகியோரையும் வெட்டினர்.
அவர்களிடம் இருந்த தப்பி ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் ராமச்சந்திரன், மகேந்திரன், கார்த்திக் ஆகியோர் தஞ்சம் புகுந்தனர். ஆனால் துரத்தி வந்த அந்த கும்பல் போலீஸ் நிலையத்துக்குள் புகுந்து அவர்களை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.
படுகாயமடைந்த ராமச்சந்திரன், மகேந்திரன், கார்த்திக் ஆகியோரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மகேந்திரன் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆண்டியின் மகன்கள் ரமேஷ் மற்றும் சுரேஷ்குமார் ஆகியோர் திருச்சி மாநகர ஆயுதப்படை பிரிவு போலீஸ்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராமச்சந்திரன் தங்களைத் தாக்கியதாக கூறி ஆண்டியும் அவரது மகன்களும் திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications