மே 30க்கு பிறகு மின்வெட்டு இருக்காது - ஆற்காடு வீராசாமி
திருச்சியில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது காற்றாலைகள் மூலம் 1000 முதல் 1800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுவாக தமிழகத்தில் மே 15ம் தேதிக்கு பிறகுதான் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கும். இந்தாண்டு ஏப்ரல் 27ம் தேதி முதலே மின் உற்பத்தி தொடங்கிவிட்டது.
இதனால் வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் பெற தேவையில்லை. தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு நாள் விடுப்பு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் நடைமுறையில் இருந்து வருகிறது.
மின் உற்பத்தியில் தற்போதுள்ள இதே நிலை நீடிக்குமானால் தொழிற்சாலைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த சுழற்சி முறையிலான விடுப்புத் திட்டம் விரைவில் ரத்து செய்யப்படும். கடந்த 2 மாதங்களாக தமிழக அரசுக்கு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிறப்பான ஒத்துழைப்பை அளித்து வருகின்றனர்.
அதேபோல தொழிற்சாலைகளுக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த யூனிட் ஒன்றுக்கு 10 பைசா சலுகையும், பர்னஸ் ஆயிலுக்கான வாட் வரியும் மே 15ம் தேதிக்கு பிறகு ரத்து செய்யப்படும்.
காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கிவிட்டதால் மே 30க்கு பிறகு தமிழகத்தில் மின் தடையே இருக்காது. தமிழக மின்வாரியத்துக்கு இந்தாண்டு ரூ.4,700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், குடிசைகள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் ஏற்படும் இழப்பான ரூ.1510 கோடியை தமிழக அரசு மின்வாரியத்துக்கு மானியமாக வழங்கி விடுகிறது.
இழப்பீடு தொகையை சரிசெய்யும் வகையில் மத்திய அரசுக்கு சொந்தமான பவர் டிரேடிங் கார்பொரேஷன் நிறுவனத்துக்கு யூனிட் ஒன்று ரூ.7 விலையில் மின்சாரத்தை விற்பனை செய்ய உள்ளோம். இதன் மூலம் ரூ.2000 கோடி வருவாய் கிடைக்கும். இதை கொண்டு மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை சரி செய்யலாம்.
பல பகுதிகளில் முன் தடை ஏற்படுவதற்கு காரணம் மின் மாற்றிகள், ஃபீடர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிந்தது. இதை நிவர்த்தி செய்ய ரூ.2000 கோடி செலவாகும். இவ்வாறு வீராசாமி கூறினார்.