சீனாவில் பயங்கர பூகம்பம்-11,200 பேர் பலி
பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் 11,200 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் தென் மேற்கு மத்திய பகுதியில் நேற்று பிற்பகலில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 7.9 புள்ளிகளாகப் பதிவானது. இதில் பள்ளிக் கூடங்கள் உள்பட பல கட்டடங்கள் இடிந்துள்ளன. இன்று காலை வரை 10,000 பேர் பலியானதாக கூறப்பட்டது. தற்போது 11,200 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சீனாவின் தென் மேற்கு பகுதியான சிஜூவான் மாகாணத்தில் செங்க்டூ-சாங்கிங் பகுதிகளில் இந்த பூகம்பம் மிக கடுமையாக மையம் கொண்டு தாக்கியது. மக்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சுமார் 100 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு பூகம்பத்தின் தாக்கம் இருந்தது. இதில் பல கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
சாங்கிங் பகுதியில் 2 பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் முதலில் 4 மாணவர்கள் பலியாயினர். 900 மாணவர்கள் இடிபாடுகளில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் 107 பேர் இறந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் சீன ராணுவத்தினர் முழுமூச்சுடன் இறங்கியுள்ளனர். பல ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டுஜியாங்ஜியான் நகரில் வீடுகள் வரிசையாக இடிந்து தரைமட்டமானது. இதனால் அங்கு பதற்றமும் பீதியும் நிலவுகிறது. இந்த பகுதியிலும் சாவு எண்ணிக்கை உயரும் என்று தெரிகிறது.
பூகம்பம் மையம் கொண்ட பகுதியில் இருந்து 1,528 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெய்ஜிங்கிலும் அதிர்வு உணரப்பட்டது. அங்கும் கட்டடங்கள் பலமாக ஆட்டம் கண்டுள்ளன. டிவி, ரேடியோவில் பூகம்பம் குறித்து உடனே அறிவிக்கப்பட்டதால் மக்கள் கட்டடங்களில் இருந்து உடனே வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் நடக்க உள்ள நிலையில் இந்த பூகம்ப தாக்குதல் அந்நாட்டுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனினும் ஒலிம்பிக் நடக்கும் பகுதி எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.
கடந்த 1976ம் ஆண்டு வடக்கு சீனாவில் 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் 2.55 லட்சம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
மன்மோகன் அனுதாபம்:
சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஏற்பட்டுள்ள உயிரழப்புக்கு தன்னுடைய ஆழந்த அனுதாபகங்களை இந்தியா சார்பில் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications