கோடநாடு எஸ்டேட் வாயிலை திறக்க கோர்ட்டில் ஒப்புதல்
டெல்லி: கோடநாடு எஸ்டேட் நுழைவாயிலை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடுவதாக எஸ்டேட் நிர்வாகத்தின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கோடநாடு எஸ்டேட் அமைந்துள்ள சாலை வழியாக காமராஜர் நகர், அண்ணாநகர் குடியிருப்புகளுக்கு மக்கள் சென்று வந்தனர். அந்த சாலையை பயன்படுத்துவோரிடம் கட்டணம் வசூலிப்பதாகவும் சாலையை மூடி வைத்துள்ளதாகவும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் நுழைவாயிலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட வேண்டும் என்று குன்னூர் சப்-கலெக்டர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்டேட் நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் சப்-கலெக்டர் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. மேலும், முன்பு பின்பற்றப்பட்ட நிபந்தனைகளுடன் நுழைவாயிலை திறந்துவிட உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதுதவிர இப்பிரச்னை தொடர்பாக மேலும் பொதுநல 2 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த 3 வழக்குகளும் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் மற்றும் நீதிபதி சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு மற்றும் பொதுமக்கள் தரப்பில் வாதிட்ட வக்கீல்கள், இந்த பிரச்னையில் சப்-கலெக்டர் பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது சட்டவிரோதம். எனவே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் உயர்நீதிமன்ற அறிவுரைப்படி நுழைவாயிலை திறந்து விடுகிறோம் என்று உறுதியளித்தோம். எனவே இந்த வழக்கில் தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டனர்.
இதை ஏற்றுக் கொண்ட பெஞ்ச், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நுழைவாயிலை திறந்து விடுவதாக எஸ்டேட் நிர்வாகம் அளித்த உறுதியை இந்த கோர்ட் பதிவு செய்கிறது. வழக்கு விசாரணை வரும் ஜூலை மாதம் தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டது. இந்த வழக்கில் கோடநாடு எஸ்டேட் நிர்வாகம் மற்றும் ஜெயலலிதா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.