ஐஏஎஸ் தேர்வில் சென்னை மாணவர் 3வது இடம்

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளைத் தேர்வு செய்ய மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் தேர்வு நடத்தி வருகிறது.
முதல் நிலை தேர்வு, மெயின், கலந்துரையாடல், நேர்முகத் தேர்வு என நான்கு கட்டமாக இந்தத் தேர்வுகள் நடைபெறும்.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நிலை எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் 3 லட்சத்து 27 ஆயிரம் பேர் எழுதினர். இவர்களிலிருந்து ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 469 பேர் மெயின் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். மெயின் தேர்வில் 9 ஆயிரத்து 266 பேர் வெற்றி பெற்றனர். இவர்களில் 670 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
மெயின் தேர்வில் தேறியவர்களில் 1886 பேர் நேர்முகத் தேர்வுக்கு முன்னேறினர். இவர்களில் 210 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று இரவு நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 734 பேர் தேர்ச்சி ெபற்றுள்ளனர். இவர்களில் 580 பேர் ஆண்கள், 154 பேர் பெண்கள். பொதுப் பிரிவின் கீழ் 286 பேரும், 12 பேர் உடல் ஊனமுற்றோர் பிரிவின் கீழும் தேர்வாகியுள்ளனர். 266 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். 128 பேர் ஆதி திராவிடர்கள். 54 பேர் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினர்.
இவர்களில் தமிழகத்திலிருந்து 79 பேர் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில் சென்னையைச் சேர்ந்த வினோத் சேஷன் என்பவர் அகில இந்திய அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் சேஷன், சென்னை சூளைமேட்டில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
வினோத் சேஷனின் தந்தை டி.வி.சேஷன் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மண்டல மேலாளராக உள்ளார். தாயார் லட்சுமி.
பள்ளிப்படிப்பை பெங்களூரில் முடித்தவர் சேஷன். பின்னர் தும்கூரில் உள்ள பொறியியல் கல்லூரியில் பிஇ எலக்ட்ரானிக் டெலிகம்யூனிகேஷன் பட்டப்படிப்பை முடித்தார்.
சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சேஷன், சென்னை அமைந்தகரையில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெற்று தேர்வு எழுதினார். இந்த மையத்தின் சார்பில் தேர்வு எழுதியவர்களில் 31 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் வினோத் சேஷன்.
ஐஏஎஸ் தேர்வில் முதல் 20 இடங்களைப் பிடித்தவர்களில் 7 பேர் என்ஜீனியர்கள் ஆவர். 3 பேர் டாக்டர்கள் ஆவர். அனைவருமே ஆங்கிலத்தில் தேர்வு எழுதியுள்ளனர்.
அகில இந்திய அளவில் முதலிடத்ைத ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் பெற்றுள்ளார். இவர் ஒரு டாக்டர். சென்னையில்தான் டாக்டர் படிப்பை படித்துள்ளார். பெண்களில் டெல்லியைச் சேர்ந்த அஷீமா ஜெயின் முதலிடத்ைதப் பிடித்துள்ளார்.
துரைசாமி அறக்கட்டளை சாதனை:
முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ சைதை துரைசாமி நடத்தி வரும் மனித நேய அறக்கட்டளையின் சார்பில் தேர்வு எழுதிய 12 மாணவர்கள் தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சைதை துரைசாமி மனித நேய அறக்கட்டளை சார்பில் யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்வோருக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஏழை மாணவர்களுக்கு தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட அனைத்தும் இலவசமாக தரப்படுகிறது.
மேலும் நேர்முகத் தேர்வுக்கு தேர்வாகும் மாணவ, மாணவியர் டெல்லி சென்று திரும்பி வருவதற்கான செலவுகளையும் இந்த அறக்கட்டளையே ஏற்றுக் கொள்கிறது.
இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு தேர்வு எழுதியவர்களில் 12 பேர் ஐஏஎஸ் அதிகாரிகளாகின்றனர்.












Click it and Unblock the Notifications