சிபிஎம் குமுறுவது ஏன்? - கருணாநிதி கேள்வி
இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் வரதராஜன் அவர்களது கட்சி பத்திரிகையில் எழுதியிருந்த மனம் திறந்த வாழ்த்து என்ற கட்டுரையை படித்தேன்.
கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை என்று ஒரு அறிக்கையில் நான் குமுறியிருப்பதை, அவர் தனது கட்சிக்கும் சேர்த்து தவறாக எடுத்துக் கொண்டதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்க வேண்டுமே தவிர விருப்போ வெறுப்போ அதை வெளிப்படையாக கூறி நயம்பட இடித்துரைத்து திருத்தும் நிலையில், கூட்டணி தர்மத்தை எல்லா கட்சிகளிலும் பேசி கடைபிடிக்கிற மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் என் அறிக்கையில் காணும் அந்த வாசகத்துக்கு தங்களுக்கு பொருந்தாத பொருளை ஏன் காண வேண்டும் என்பதே என் கவலை.
மற்றபடி மனம் திறந்து அவர் என்னை பற்றி எழுதியுள்ள வாழ்த்துக் கட்டுரையை, இந்த விளக்கத்தை தவிர வரிக்கு வரி அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இதோ வரதராஜனின் வாழ்த்துரை:
கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை என்ற கருணாநிதியின் அறிக்கை தோழமை கட்சியினரின் செயல்பாட்டை இன்ன கட்சிகள் என கூறப்படாத நிலையில், பொத்தாம் பொதுவாக கூறப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.
தமிழகத்தில் கடந்த கால மக்கள் விரோத, எதேச்சிகார ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்ற அறைக்கூவலோடுதான், திமுகவுடன் தோழமை கரம் கோர்த்து தேர்தல் களத்தில் நின்றோம். இந்த ஆட்சியை குறுக்கு வழியில் வீழ்த்த துடிக்கும் தீய சக்திகளின் முயற்சியை முறியடிப்பதிலும் துணை நிற்போம்.
ஆட்சிக்கு ஆதரவும் தோழமையும் ஒருபக்கம் நீடிப்பதும் மக்கள் பிரச்னைகளில் சுயேச்சையான நிலைபாட்டை மேற்கொள்வதும் ஒரு ஜனநாயக கடமை என்றும் மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. எனவே கூட இருந்தே குழி பறிப்போரின் தோழமை என்ற கருணாநிதியின் கூற்றுக்கு அப்பால் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கிறது. தமிழகத்தில் தோழமை கட்சிகளாக இருப்பதில் இருந்து அடிப்படையில் வேறுபட்டது மார்க்சிஸ்ட் கட்சி.
மேற்கு வங்கம், திரிபுரா, கேரளா மாநிலங்களில் ஒரு பொதுவான இடதுசாரி திட்டத்தின் அடிப்படையில், இதர 3 இடதுசாரி கட்சிகளோடு தோழமை கொண்டுள்ளோம். கூட்டணி ஆட்சியிலேயே நீடிக்கிற தோழமை அது. ஆனால் இந்த இடதுசாரி கட்சிகளே கூட மார்க்சிஸ்ட் கட்சிக்கு எதிராக சுயேட்சையான நிலைப்பாட்டை எடுத்ததையும், கடுமையான விமர்சனங்களை தொடுத்ததையும் நாடே அறியும் அல்லவா?
அதற்காக இடதுசாரி கட்சிகளை மார்க்சிஸ்ட் கட்சி சினந்தோ, முனிந்ததோ இல்லையே. கருத்து வேறுபாடுகளை களைய ஜனநாயக ரீதியில் அல்லவா விவாதம் நடத்துகிறோம்.
தோல்வி கண்டு துவளாமை; துரோகம் கண்டு தளராமை என்பதுதான் கருணாநிதியின் அரசியல் முதிர்ச்சிக்கான அடையாளங்கள். எனவே 85வது பிறந்தநாளில் தளர்வுக்கும் சளிப்புக்கும் இடம் தராமல், மக்கள் தொண்டை தொடருங்கள் என்ற வேண்டுகோளோடு இந்த மனம் திறந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம் என்று வரதராஜன் தெரிவித்துள்ளதாக கருணாநிதி கூறியுள்ளார்.