ஊக்க மருந்து உட்கொண்டதாக அக்தர் மீது புதுப் புகார்
டெல்லி: பல்வேறு சர்ச்சைகளிலிருந்து மீண்டு வந்துள்ள பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மீது, ஊக்க மருந்து உட்கொண்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
ஒழுங்கீனம் காரணமாக ஐந்து ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட சோயிப் அக்தருக்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது. இருப்பினும் அந்தத் தண்டனை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். இந்த நிலையில் அக்தர் மீது புதிய புகார் எழுந்துள்ளது.
கராச்சியில் இருந்து இந்தியா வருவதற்கு முன்பாக அவரது அறையில் சிரிஞ்சுகள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி யிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் இந்தப் புகாரை அக்தர் மறுத்துள்ளார். நான் ஒரு சர்க்கரை நோயாளி. எனவே இன்சுலின் எடுத்துக் கொள்வதற்காக தினசரி ஊசி போட்டுக் கொள்வது வழக்கம். அதற்குப் பயன்படுத்தப்பட்ட சிரிஞ்சுதான் அது என்று கூறுகிறார் அக்தர்.
இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பாதிப் போட்டிகள் முடிவடைந்து விட்ட நிலையில் ஐபிஎல்லின் இந்த அறிவிப்பு வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அக்தர் விவகாரத்தைத் தொடர்ந்தே, எதற்கு வம்பு என்று இந்த முடிவுக்கு ஐபிஎல் வந்திருப்பதாக கூறப்படுகிறது.