தாசில்தாரை மணல் லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி
தஞ்சாவூர்: தஞ்சை அருகே மணல் கடத்தலை தடுக்க முயன்ற தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் மணல் கடத்தலை தடுக்க மாவட்ட கலெக்டர் விஜயராஜ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர், கும்பகோணம் கோட்டாட்சியர், பாபநாசம் தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் பாபநாசம் தாசில்தார் மான்சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் ராஜசேகர், அன்பழகன், உள்பட 5 பேர் நேற்று இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குடமுருட்டி பாலம் அருகே வேகமாக வந்த லாரியை தாசில்தார் மான்சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் மறிக்க முயன்றனர்.
ஆனால் அந்த லாரி நிற்காமல் சென்றது. மேலும் தாசில்தார் மற்றும் அவருடன் வந்த 5 பேர் மீது மோதவும் லாரி டிரைவர் முயன்றுள்ளார்.
ஆனால் சுதாரித்துக் கொண்ட ஐந்து பேரும் தப்பி விட்டனர். இதுகுறித்து மான்சிங் போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செல்வமணி வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட லாரியைத் துரத்திச் சென்று மடக்கினார். ஆனால் லாரி நிற்காமல், போலீஸார் மீதும் ஏறுவது போல வேகமாக வந்தது. இதையடுத்து சுதாரித்த போலீஸார் விலகி பின்னர் மீண்டும் லாரியைத் துரத்தி மடக்கி நிறுத்தினர்.
ஆனால் லாரி டிரைவர் அருகில் இருந்த காட்டுப் பகுதிக்குள் நுழைந்து தப்பி விட்டார். லாரியைக் கைப்பற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.