உயர் கல்வித்துறை சிறப்பாகவே உள்ளது: ராமதாஸுக்கு பொன்முடி பதில்
சென்னை: தமிழக அரசின் உயர்கல்வித்துறை நிகழ்த்தியுள்ள சாதனைகளை மறைத்து, அன்றாடம் குற்றம் சாட்டி வருகிறார் டாக்டர் ராமதாஸ் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆகாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்ற கிராம பழமொழியை ராமதாஸ் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறார். அதனால் தான் உயர் கல்வித்துறையின் 2 ஆண்டு செயல்பாட்டை நடுநிலையோடு விமர்சிக்காமல் ஒரு உருண்டை சோற்றில் பூசணிக்காயை மறைக்க முயற்சித்துள்ளார்.
சட்ட சிக்கல்களை சமாளித்து தொழிற்படிப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் கிராமப்புற மாணவர்கள் 43.9 சதவிகிதம் பேர் கூடுதலாக பயன் பெற்றனர். கடந்த ஆட்சியில் அரசு ஒதுக்கீடு 50 சதவிகிதமாக இருந்ததை 65 சதவிகிதமாக இந்த அரசு உயர்த்தியதால் சுமார் 56 ஆயிரம் பேர் பயனடைந்தனர்.
இரண்டு ஆண்டுகளில் 6 இடங்களில் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் அறவே ரத்து செய்யப்பட்டு, இலவச பஸ் பாசும் வழங்கப்படுகிறது. இதனால் பயனடைந்தோர் சுமார் 1 லட்சத்து 58 ஆயிரம் பேர்.
உயர் கல்வியில் கடந்த ஆட்சிக்கும், இந்த ஆட்சிக்கும் வித்தியாசமே இல்லை என்று "உள்நோக்கமே இல்லாத உண்மை விளம்பி' கூறுகிறார். அரசு பொறியியல் கல்லூரிகளில் கல்விக்கட்டணம் குறைக்கப்பட்டது இந்த ஆட்சியில் தான். அண்ணா பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டு 6 இடங்களில் புதிய பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறும் வகையில் மதிப்பெண்கள் குறைத்ததற்கு கூட உள்நோக்கம் கற்பிப்பது காமாலை கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போலவே உள்ளது.
முதலமைச்சருக்கு கல்வியாளர் குழந்தை சாமி எழுதிய கடிதத்தை, எல்லாம் தெரிந்த ராமதாஸ் படிக்கவில்லையா? தேசிய அறிவு சார் ஆணையம் பரிந்துரைத்தபடியே தமிழகத்தில் புதிதாக 7 பல்கலைக்கழகங்கள் துவங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
கல்வியின் தரத்தை உயர்த்தவும், ஆசிரியர்களின் நிலையை மேம் படுத்தவுமே இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டது. இது குறித்த நிறை குறைகளை சட்டமன்ற ஆய்வுக் குழுவுடனும், ஆர்வமுடைய வர்களுடனும் அரசு விவாதித்து விரை வில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார் பொன்முடி.












Click it and Unblock the Notifications