நட்பை கைவிட நெருக்குதல் - இரு தோழிகள் தற்கொலை!
சென்னை: தங்களது நட்பைக் கைவிட குடும்பத்தினர் நெருக்குதல் கொடுத்ததால் மனம் உடைந்த இரு தோழிகள் நள்ளிரவில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
சென்னையைச் சேர்ந்தவர் கிறிஸ்டி (35). அவர் வசித்து வந்த அதே பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி (36). இருவரும் சிறு வயது முதல் நெருங்கிய தோழிகள். எப்போதும் ஒன்றாகவே இருப்பார்கள், எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வார்கள்.
இவர்களது நெருங்கிய நட்பைப் பார்த்து அப்பகுதியினர் வியந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் திருமணமானது. கிறிஸ்டி, கே.கே.நகரைச் சேர்ந்த சின்னப்பராஜ் என்பவரைக் கல்யாணம் செய்து கொண்டார். மோகன் என்பவருடன் ருக்மணிக்கு திருமணம் நடந்தது.
திருமண பந்தம் வந்த பிறகும் கூட நட்பு வளையத்திலிருந்து ருக்மணியும், கிறிஸ்டியும் வெளியேற விரும்பவில்லை. முன்பு போலவே இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். இது சின்னப்பராஜ், மோகன் குடும்பத்தினருக்குப் பிடிக்கவில்லை.
இந்த நட்பு சரியல்ல, கைவிட்டு விடுங்கள், இருவரும் இனிமேல் சந்திக்கவே கூடாது என்று தடை விதித்தனர். இருந்தாலும் தடையை மீறி அவ்வப்போது இரு தோழிகளும் சந்தித்து வந்தனர். இதனால் இருவரது குடும்பத்திலும் பிரச்சினைகள் எழுந்தன. ஆனால் அதையும் தாண்டி தங்களது நட்பைப் பேணிக் காத்து வந்தனர் ருக்மணியும், கிறிஸ்டியும்.
இந்த நிலையில், கடந்த வாரம் ருக்மணி தனது சகோதரி பத்மாவதியின் வீட்டுக்குப் போனார். பின்னர் அங்கிருந்து நேராக கிறிஸ்டி வீட்டுக்குப் போய் விட்டார்.
இதை அறியாத ருக்மணியின் கணவர் மோகன், பத்மாவதி வீட்டுக்கு வந்து ருக்மணி இன்னும் வீடு திரும்பவில்ைல என்று கூறியுள்ளார். அதைக் கேட்டுக் குழம்பிய பத்மாவதி, வீட்டுக்குத்தான் வருவதாக ருக்மணி சொன்னதாக கூறியுள்ளார். இந்த நிலையில் ருக்மணி, கிறிஸ்டி வீட்டுக்குப் போனது தெரிய வந்தது.
இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று மோகனும், பத்மாவதியும் கிறிஸ்டி வீட்டுக்குச் சென்றனர். ருக்மணியை வீட்டுக்கு வருமாறு மோகன் அழைத்தார். அதற்கு ருக்மணி, இன்று மட்டும் கிறிஸ்டியுடன் இருக்கிறேன். இனிமேல் இருவரும் சந்திக்க மாட்டோம். இன்று மட்டும் எங்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியுள்ளார்.
அதை மறுக்க முடியாத மோகன் சரி என்று கூறி விட்டு வீட்டுக்குத் திரும்பினார். அன்று இரவு இரு தோழிகளும் தங்களது நட்புக்கு வந்த சோதனையை நினைத்து அழுதபடி இருந்துள்ளனர். இருவரும் பிரிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தனர்.
இதையடுத்து நேற்று அதிகாலையில், இருவரும் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இரு குடும்பத்தினரும் நட்பைக் கைவிடுமாறு நெருக்குதல் கொடுத்ததால்தான் கிறிஸ்டியும், ருக்மணியும் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.