ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைவர் உள்பட 9 பேர் கொலை
கடப்பா: ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைவர் உள்பட 8 பேர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்னூல் மாவட்ட தெலுங்கு தேச தலைவர் வெங்கடப்ப நாயுடு. இப்பகுதியில் இவர் பிரபல தாதா. கட்டப்பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது உள்ளன.
இவருக்கு பல தரப்பிலிருந்தும் கொலை மிரட்டல்கள் இருந்து வந்தன. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இவரை 12 முறை கொலை செய்யப் பார்த்தனர். அந்த அளவுக்கு வெங்கடப்ப நாயுடு மீது பல குழுக்கள் கொலை வெறியுடன் சுற்றித் திரிந்தன.
இந்த நிலையில் நேற்று காலை வெங்கடப்ப நாயுடு, போடனூரு என்ற கிராமத்திற்குக் காரில் சென்றார். அவருடன் சகோதரர், அடியாட்கள் உள்பட 11 பேர் இருந்தனர்.
போடனூர் போய் விட்டு அவர்கள் திரும்பியபோது வழியில் ரெட்டிவரிப்பளே என்ற இடத்தில் ஒரு லாரி அவர்களின் கார் மீது மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் காயமடைந்தனர்.
இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில், திடீரென அங்கு வந்த ஒரு காரிலிருந்து இறங்கிய சிலர், வெங்கடப்ப நாயுடுவின் கார் மீது வெடிகுண்டுகளை சரமாரியாக வீசினர். இதில், வெங்கடப்ப நாயுடு உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சிலரை, அக்கும்பல் பெரிய சைஸ் கத்திகளால் குத்திக் கொன்று விட்டு அங்கிருந்து சென்றுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பயங்கர கொலை தொடர்பாக 18 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.