இலங்கைக்கு வாக்கி டாக்கிகளைக் கடத்த முயன்ற 3 பேர் கைது
மதுரை: மதுரையிலிருந்து 44 வாக்கி டாக்கிகளை இலங்கைக்குக் கடத்த முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மதுரை திலகர் திடல் பகுதியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். ராஜா மில் சாலையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு டாடா சுமோ கார் வேகமாக வந்தது. அந்த காரை மறித்து நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தினர்.
காரை நிறுத்தியதும், அதில் இருந்த 6 பேர் காரிலிருந்து இறங்கி ஓடினர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் துரத்தினர். இதில், 3 பேர் பிடிபட்டனர், மற்றவர்கள் தப்பி விட்டனர்.
பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் மன்னார் பேசாலையைச் சேர்ந்த விஜி என்கிற ஜெயராஜ், யாழ்ப்பாணத்தைச் ேசர்ந்த பத்மராசா என்கிற சின்னவன் மற்றும் மதுரையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது.
இவர்களில் ஜெயராஜ், திருவாதவூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்தவர். இவர் முன்பு ஒரு கொலை வழக்கில் சிக்கியவர். அவனியாபுரம் காவல் நிலையத்திலும் இவர் மீது கொலை முயற்சி வழக்கில் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ளது. மேலூர் காவல் நிலையத்திலும் வழக்கு உள்ளது.
இவர்கள் பயணித்த காரில் 44 வாக்கி டாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதுதவிர ரூ. 4..59 லட்சம் ரொக்கப் பணமும் சிக்கியது.
மேலும் செந்தில்குமார் போலீஸாரிடம் கொடுத்த வாக்குமூலத்தின்படி, அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த திரவ எரிபொருளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 3 பேரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களா என்பது குறித்து கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.