கோடைகால நீச்சல் பயிற்சிக்குச் சென்ற சிறுவன் பலி
சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கோடைகால நீச்சல் பயிற்சிக்குச் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதையடுத்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், இரு பயிற்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருடைய மகன் ரொனால்டோ. இவன், சென்னை வடபழனி 100 அடி சாலையில் உள்ள தி லீக் கிளப் என்கிற நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோடைகால நீச்சல் பயிற்சி முகாமில் சேர்ந்தான்.
நேற்று வழக்கம் போல நீச்சல் பயிற்சிக்குச் சென்ற சிறுவன் ரொனால்டோ எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மூச்சுத்திணறி இறந்தான்.
இதையடுத்து சிறுவனின் தந்தை ஜான்சன், சூளைமேடு காவல் நிலையத்தில் நீச்சல் பயிற்சியாளர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் இறந்ததாக புகார் கொடுத்தார். இதுகுறித்து ஜான்சன் கூறுகையில், அந்த நீச்சல் குளம் அருகே முதலுதவிக்கான எந்த வசதியும் இல்லை. ஆம்புலன்ஸைக் கூட அவர்கள் வரவழைக்கவில்லை.
எனது மகனின் மரணத்திற்கு, பயிற்சியாளர்களின் அலட்சியப் போக்குதான் முழுக் காரணம் என்றார்.
ஜான்சன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் பயிற்சியாளர்கள் குகன் மற்றும் கல்பனா ஆகியோரைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications