For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தபுரம் பாணியில் சேலம் அருகே தீண்டாமைச் சுவர் கட்ட முயற்சி

By Staff
Google Oneindia Tamil News

சேலம்: சேலம் மாவட்டம் ஆட்டையம்பட்டி அருகே தீண்டாமைச் சுவர் கட்ட ஒரு தரப்பினர் முயற்சிப்பதால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உத்தபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர் இந்தியாவையே அதிர வைத்தது. அந்த சுவரை இடிக்க வேண்டும் என்று தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்க்கொடி உயர்த்தியதால் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது.

இந்த சர்ச்சை இப்போதுதான் ஓய்ந்துள்ள நிலையில் சேலம் மாவட்டம் ஆட்டையம்பட்டி அருகே தீண்டாமைச் சுவர் கட்ட ஒரு தரப்பினர் முயற்சிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆட்டையம்பட்டி அருேக உள்ள கிராமம் சந்தியூர். இங்கு ஊருக்கு மத்தியில் மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு ஒரு புறம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், மறுபுறம் பிற ஜாதியினரும் வசிக்கின்றனர்.

கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நுழைய அனுமதி கிடையாது. வெளியில் இருந்தபடிதான் சாமி கும்பிட வேண்டும், அவர்களின் கையைத் தொடாமல் கோவில் பூசாரி பிரசாதம் கொடுப்பார். அதைத்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

காலம் காலமாக நடந்து வரும் இந்த தீண்டாமைச் செயலுக்கு எதிராக தாழ்த்தப்பட்ட வகுப்பினர் இதுவரை எதிர்ப்புக் குரல் எழுப்பியதில்லை. பொறுத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவிலுக்கு அருகில் உள்ள காலி மைதானத்திற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வராமல் தடுக்கும் வகையில், ஒரு சுவரை எழுப்ப ஒரு ஜாதியினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். சுவர் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கு தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுவரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து வருகின்றனர். இந்த நிைலயில் பொதுவாக உள்ள மைதானத்திற்குள்ளும் நுழைய முடியாமல் சுவர் எழுப்ப முயற்சிப்பதைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

சுவர் கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அவர்கள் நேற்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தங்களது போராட்டம் குறித்து சந்தியூர் கிராமத்தைச் சேர்ந்த மேச்சேரி வாசன் என்பவர் கூறுகையில், கோவில் அவர்களுக்குச் சொந்தமானது. எனவே அவர்கள் வைத்ததுதான் அங்கு சட்டம். அதை நாங்களும் மீற விரும்பவில்லை. இப்போது உள்ள நிலையே தொடரட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் மைதானத்திற்குள்ளும் நாங்கள் வரக் கூடாது என்று கூறுவது நியாயமல்ல. ஏதாவது விசேஷம், கூட்டம் என்றால் அந்த மைதானம் மட்டுமே உள்ளது. அதையும் தடுக்க முயற்சித்தால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இதை மாவட்ட ஆட்சித் தலைவரும், அரசும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

தீண்டாமைச் சுவர் கட்ட நடக்கும் முயற்சியால் சந்தியூர் கிராமம் பரபரப்பாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வசிக்கும் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X