மலேசியா ஆளும் கட்சியில் இருந்து மகாதிர் விலகல்

82 வயதான மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது ஆளும் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய கழகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 22 ஆண்டுகளாக அந்நாட்டு பிரதமராக மகாதிர் இருந்துள்ளார். இவர்தான், படாவியை, தனது அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்து அவரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் 8ம் தேதியன்று நடந்த பொதுத்தேர்தலில் அப்துல் படாவி தலைமையிலான ஆளும் கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் அதற்கு முந்தைய பொதுத்தேர்தலைவிட மிகக் குறைந்த இடங்களைத்தான் அந்த கட்சி கைப்பற்ற முடிந்தது.
இந்த தோல்விக்கு பொறுப்பேற்று அப்துல் படாவி பதவி விலகவேண்டும் என்று மகாதிர் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். இதனை ஏற்க படாவி மறுத்துவிட்டார்.
இந்நிலையில் படாவியின் செயல்பாடுகள் ஏமாற்றம் அளிப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கட்சியில் இருந்து விலகுவதாக தனது ஆதரவாளர்கள் மத்தியில் மகாதிர் அறிவித்துள்ளார்.
ஐக்கிய மலாய் தேசியக் கழகத்தில் இருந்து இதர நிர்வாகிகளும் விலகவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனாலும், படாவியை எதிர்த்து வெளியேறுபவர்கள் எதிர்க்கட்சிக்கு சென்று விடவேண்டாம் என்றும், கட்சித் தலைமையில் மாற்றம் வரும்போது தன்னுடன் சேர்ந்து மீண்டும் கட்சியில் இணையலாம் என்றும் மகாதிர் முகமது கூறியுள்ளார்.
மகாதிரின் அதிரடி நடவடிக்கையால், படாவி அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மகாதிரின் இந்த முடிவு தனக்கு அதிர்ச்சி அளிப்பதாகவும், இதனால் கட்சியில் தனக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும் படாவி கூறியுள்ளார். வரும் டிசம்பரில் நடக்கும் தேர்தலில் தனது பொறுப்பை நிலைநாட்டுவகையில் ஜெயித்துக் காட்டுவேன் என அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications