வறுமையால் தடைபடும் மாணவியின் உயர் கல்வி ஆசை
ஈரோடு: நன்கு படித்தும், மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றும், தொடர்ந்து படிக்க வறுமை தடையாக இருப்பதால் பெரும் கவலையில் ஆழ்ந்துள்ளார் ஈரோடு, வீரப்பன் சத்திரம் வனிதா.
ஈரோடு மாவட்டம், வீரப்பன் சத்திரம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் வனிதா (24).
பாதியில் முறிந்த படிப்பு:
நன்கு படிக்கக் கூடியவரான வனிதாவுக்கு வறுமை பெரும் தடைக் கோடாக மாறியது. வறுமையின் காரணமாக படிக்க வைக்க முடியாமல் இவரை, தர்மபுரி அருகே கோட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.
ஆனால் துரதிர்ஷ்டம் துரத்தி வந்தது வனிதாவை. திருமணம் ஆன மூன்று வருடத்திலேயே மூளை காய்ச்சல் ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக ஏழுமலை இறந்து போனார்.
இதனால் வனிதா மீண்டும் தனது தந்தை வீட்டுக்குத் திரும்பினார். கணவரை இழந்து கைம்பெண்ணாக திரும்பிய வனிதாவுக்கு மீண்டும் படிக்க ஆர்வம் ஏற்பட்டது. பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து, சேலம் அரசு சேவை இல்லப் பள்ளியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார்.
நடந்து முடிந்த பிளஸ்டூ தேர்வில், டெக்ஸ்டைல்ஸ் அண்ட் பேஷன் டிசைனிங் பாட பிரிவில் 1071 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவியாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் வனிதா.
ஆசிரியை ஆக வேண்டும் என்பதே வனிதாவின் விருப்பம், லட்சியம், ஆசை. ஆனால் அதற்கு பெரும் முற்றுக் கட்டையாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது வீட்டின் வறுமை. உயர் கல்வி பெற தேவையான பணம் இல்லாததால் படிப்பை தொடர முடியாமல் வனிதா தவித்து வருகிறார்.
வனிதாவின் நிலை குறித்து நாம் வெளியிட்ட செய்தியைப் பார்த்து பல நல்ல உள்ளங்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் நம்மை தொடர்பு கொண்டு வருகின்றனர். வனிதாவின் கல்வி தொடர கரம் நீட்ட அவர்கள் முன்வந்துள்ளனர். அவர்களின் வசதிக்காக இதோ வனிதாவின் முகவரியும், அவரது செல்பேசி எண்ணும்.
வனிதாவுக்கு உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்:
வனிதா
த/பெ. மூர்த்தி
ராஜாஜி வீதி
வீரப்பன் சத்திரம்
ஈரோடு - 638 004.
செல் எண் - 94427 - 27012












Click it and Unblock the Notifications