விண்ணைத் தொடும் காய்கறி விலை - மக்கள் பெரும் அவதி
சென்னை: காய்கறி விலை மிகக் கடுமையாக உயர்ந்திருப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. இதுவரை எந்தப் பொருளின் விலையும் குறைந்ததாகத் தெரியவில்லை.
சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை மகா உயரத்தில் இருக்கும் நிலையில் தற்போது காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மக்களை நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது.
காய்கறிகளின் விலையும் மிகப் பயங்கரமாக உயர்ந்திருப்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அதிகபட்சமாக பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 45 வரை விற்கப்படுகிறது. கேரட் கிலோ ரூ. 26க்கு விற்கிறது. கத்திரிக்காய் கெட்ட கேட்டுக்கு கிலோ ரூ. 18 வரை விற்கப்படுகிறது.
பாகற்காய் விலை ரூ. 20 ஆகவும், சாம்பார் வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் ரூ. 29க்கும், தக்காளி கிலோ ரூ. 12 வரையும் விற்கப்படுகிறது.
முருங்கைக் காய் விலையும் மிகக் கடுமையாக உள்ளது. கிலோ முருங்கைக்காய் ரூ. 30 வரை கடைகளில் விற்கப்படுகிறது.
இப்படி தினசரி பயன்படுத்தப்படும் அதி முக்கிய காய்கறிகளின் விலை மிகக் கடுமையாக இருப்பதால் எதை வாங்குவது, எப்படிச் சாப்பிடுவது என்ற கவலையில் இல்லத்தரசிகள் குழம்பிப் போய் உள்ளனர்.
கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடைகளில் விற்பதை விட 5 முதல் பத்து ரூபாய் வரை குறைந்து காணப்படுகிறது. ஆனால் கடைகளில்தான் இஷ்டத்திற்கு வலை வைத்து விற்று வருகின்றனர்.
ஆனால் லாரி வாடகை அதிகரித்து விட்டது, சுமை தூக்கும் பணியாளர்களும் கூலியை உயர்த்தி விட்டனர். இதனால் மார்க்கெட்டிலிருந்து கடைகளுக்கு காய்கறிகளைக் கொண்டு வருவதற்கான செலவு அதிகரித்து விட்டது. எனவேதான் மார்க்கெட்டை விட கடைகளில் விலை கூடுதலாக இருப்பதாக கடைக்காரர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் ஒரேயடியாக கடைக்காரர்கள் விலையை உயர்த்தி விற்பது நியாயமற்றது, இதை அரசு உரிய நடவடிக்கை எடுத்துக் கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.