பெட்ரோல் விலையை ரூ. 10 உயர்த்த பரிந்துரை

பெட்ரோல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்றும் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று கூறியிருந்தார். இந் நிலையில் மத்திய அரசிடம் பெட்ரோலியத்துறை இந்தப் பரிந்துரையை செய்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகக் கடுமையாக உள்ளது. பேரல் ஒன்று 135 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய பெட்ரோல் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நஷ்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், நஷ்டத்தை சரிக்கட்டி, எண்ணெய் நிறுவனங்களைக் காப்பாற்ற பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை பெருமளவில் உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலியத்துறையை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், இன்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் எம்.எஸ்.சீனிவாசன், பெட்ரோலிய நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிலைமை மோசமாகி வருகிறது. ஆரம்பத்திலேயே இதை சரி செய்ய வேண்டியது அவசியமாகியுள்ளது.
2 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை சமாளிப்பதற்கு பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்துவதோடு, அவற்றுக்கு அளிக்கப்படும் தீர்வை விலக்கையும் குறைக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்த மத்திய அரசுக்கு பெட்ரோலியத் துறை பரிந்துரைத்துள்ளது.
இதுதவிர கச்சா எண்ணெய் மீதான சுங்கத் தீர்வை மற்றும் பெட்ரோல், டீசல் மீதான இறக்குமதி தீர்வை சலுகையில் 5 சதவீத அளவிற்கு குறைக்க வேண்டும் என்றும் பெட்ரோலியத்துறை பரிந்துரைத்துள்ளது.
இந் நிலையில் இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பெட்ரோலிய விலை உயர்வு குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், அந்த விவாதம் நடக்கவில்லை.












Click it and Unblock the Notifications