வேளாங்கண்ணி ஆலய நிலத்தை அபகரிக்க முயற்சி
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி ஆலயத்தின் நிலத்தை அபகரிக்க முயன்று வரும் கும்பல் அந்த பேராலயத்தின் நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நிலம் வேளாங்கண்ணி பஸ் நிலையம் அருகில் உள்ளது.
அந்த நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் சிலர் பொக்லைன் எந்திரங்கள் வைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தகவல் அறிந்த பேராலய நிர்வாகி சேவியர் அடிகளார், மற்றும் பாதிரியார்கள் அங்கு விரைந்து சென்று நில ஆக்கிரமிப்பு செய்த ரவி, தனபால், தங்கவேல், ஆசை பாண்டி ஆகியோரிடம் பேசினர்.
அப்போது அந்த கும்பல் பாதிரியார்களை தாக்க முயன்றது. மேலும் சேவியர் அடிகளார், மற்றும் பாதிரியார்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து சேவியர் அடிகளார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நிலத்தை பாதுகாக்குமாறும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
பாதிரியர் மீது தாக்குதல்:
இதற்கிடையே கோவை அருகே மேட்டுப்பாளையத்தில் பாதிரியர் மீது மர்ம கும்பல் தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை மற்றும் வெள்ளியங்காடு பகுதிகளில் வசித்து வரும் மலை வாழ் மக்களிடம் கிறிஸ்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் தீவிர மத பிரச்சாரம் செய்து வருவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இதனால் இந்து அமைப்புகளுக்கும் கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந் நிலையில் காரமடை அருகே உள்ள மேல்பாவியூர் மலை கிராமத்தில் நீதிராஜ் என்ற கிறிஸ்துவ பாதிரியார் மத பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அப் பகுதியில் உள்ள சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் நேற்று சர்ச்சில் இருந்த நீதிராஜ் மீது முன்று பேர் கொண்ட மர்ம கும்பல் உருட்டு கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு அவர் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
நீதிராஜ் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பாதிரியார் மீது தாக்குதல் நடத்தி வி்ட்டு தப்பியோடிய கும்பலை காரமடை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.