மத்திய அரசின் முடிவு ஆரம்பமாகி விட்டது- மோடி
அகமதாபாத்: கர்நாடகத்தில் பாஜகவுக்குக் கிடைத்துள்ள மாபெரும் வெற்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் முடிவின் ஆரம்பமாகும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடிவு குறித்து நரேந்திர மோடி கருத்து ெதரிவிக்கையில், தென் மாநிலம் ஒன்றில் தனிப்பெரும் பலத்துடன் பாஜக ஆட்சியைப் பிடித்திருப்பது மிகப் பெரிய சாதனையாகும்.
பாஜகவின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் கர்நாடக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தென் மாநிலம் ஒன்றில் பாஜக, தனிப்பெரும்பலத்துடன் ஆட்சியைப் பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.
முன்பு குஜராத், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பாஜக வென்றது. இப்போது கர்நாடகத்தையும் கைப்பற்றியுள்ளோம்.
காங்கிரஸ் கட்சியின் நிலைமை மோசமானது என்ற நிலையிலிருந்து படு மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மக்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறி விட்டது. இதனால்தான் கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
துரோக அரசியலுக்கு கர்நாடக மக்கள் கடும் தண்டனை கொடுத்துள்ளனர்.
எதிர் வரும் லோக்சபா தேர்தலில் தனது கூட்டணியை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள காங்கிரஸ் கண்டிப்பாக சிரமப்படும்.
கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கையை காங்கிரஸ் இழக்க ஆரம்பித்துள்ளது. கூட்டணிக் கட்சிகள் இனியும் காங்கிரஸுடன் இணைந்து இணக்கமாக செயல்படும் என எதிர்பார்க்க முடியாது. கூட்டணியின் சிதைவும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியின் முடிவும் ஆரம்பமாகியுள்ளது என்றார் மோடி.
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்காக தீவிரப் பிரசாரம் மேற்கொண்ட பாஜக தலைவர்களில் மோடியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications