குண்டாறு அணையில் மீண்டும் படகு சவாரி
தென்காசி: செங்கோட்டை குண்டாறு அணையில் மீண்டும் படகு சவாரி துவக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
கோடை வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் நீர் நிலைகளை நாடி செல்கின்றனர். குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் போய்விட்டது.
இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பாபநாசம், மணிமுத்தாறு போன்ற இடங்களுக்கு சென்று குளித்து மகிழ்கின்றனர். மேலும் சிலர் செங்கோட்டை குண்டாறு அணைக்கு சென்று வருகின்றனர். குண்டாறு அணையில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.
மேலும் குண்டாறு அணைக்கு மேலே சிறு சிறு அருவிகள் இயற்கை சூழலில் உள்ளதால் அங்கும் சென்று குளித்து மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக குண்டாறு அணையில் நேற்றுமுதல் படகு சவாரி துவக்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய நபருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குண்டாறு அணையில் படகு சவாரி ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications