பாஜகவுக்கு 3 சுயேச்சைகள் ஆதரவு-ஆட்சியமைப்பதில் சிக்கல் தீர்ந்தது
இதில் 3 சுயேச்சைகள் பாஜகவை ஆதரிக்க முன் வந்துள்ளனர். இதில் ஒருவர் பாஜக அதிருப்தியாளர், ஒருவர் காங்கிரஸ் அதிருப்தியாளர், இன்னொருவர் மதசார்பற்ற ஜனதா தள அதிருப்தியாளர் ஆவார். இவர்கள் தங்களுக்கு தேர்தலில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றவர்கள்.
முன்னதாக இந்த சுயேச்சைகளை வளைக்க காங்கிரசும் மதசார்பற்ற ஜனதா தளமும் களமிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
224 பேர் கொண்ட கர்நாடக சட்டசபையில் ஆட்சியமைக்க 113 எம்எல்ஏக்கள் தேவை. நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் பாஜக 110 இடங்களைப் பிடித்து முதலிடத்தைப் பிடித்தது.
காங்கிரஸ் 80 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 28 இடங்களிலும் வென்றன. சுயேச்சைகள் 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதில் 4 பேர் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள். சீட் கிடைக்காததால் தனியே நின்று வென்றவர்கள். இவர்களை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் இழுக்க அந்தக் கட்சி தீவிரமாக களமிறங்கியது.
மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த ஒருவரும் சுயேச்சையாக வென்றுள்ளார்.
இன்னொரு சுயேச்சை பாஜகவை சேர்ந்தவர். இவரும் சீட் கிடைக்காததால் அதிருப்தி வேட்பாளராக கனககிரி தொகுதியில் தனித்து போட்டியிட்டு வென்றுள்ளார். இவர் பாஜகவுக்கு ஆதரவு தர முன் வந்துவிட்டார். இதனால் அக் கட்சியின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்தது.
ஆட்சியமைக்க இன்னும் இரண்டே எம்எல்ஏக்களே தேவை என்ற நிலையில் காங்கிரசில் சீட் கிடைக்காததால் தனித்துப் போட்டியிட்டு வென்ற 4 எம்எல்ஏக்களில் மளவல்லி (தனி) தொகுதி உறுப்பினர் நரேந்திர ஸ்வாமி இன்று பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார்.
இதேபோல் ஒசதுர்கா தொகுதியில் வென்ற மதசார்பற்ற ஜனதா தள அதிருப்தி வேட்பாளர் சேகரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த மூவரும் பங்கேற்றனர்.
இதனால் மெஜாரிட்டியை நிரூபிக்கத் தேவையான 'மேஜி்க் நம்பரான' 113யை பாஜக எட்டிப் பிடித்துவிட்டது. இதனால் ஆட்சியமைப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
இந்த 3 சுயேச்சைகளும் அமைச்சர் பதவி கேட்பதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் ஆட்சியை ஸ்திரமாக்க மற்ற 3 காங்கிரஸ் சுயேச்சைகளையும் வளைக்கும் முயற்சிகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவர்களும் பாஜக பக்கம் வரக் கூடும் எனத் தெரிகிறது.