கர்நாடக முதல்வராக 29ம் தேதி எதியூரப்பா பதவியேற்பு
கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பலரின் எதிர்பார்ப்புகளையும் மீறி பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 224 இடங்களில் 110 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது. இது அறுதிப் பெரும்பான்மைக்கு 3 இடங்கள் குறைவாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு 80 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதாதளத்திற்கு 28 தொகுதிகளும் கிடைத்துள்ளன. 6 சுயேச்சைகளும் தேர்தலில் வென்றுள்ளனர்.
பெரும்பான்மை பலத்திற்கு பாஜகவுக்கு இன்னும் 3 பேரே தேவை. இந்த ஆதரவை சுயேச்சைகளிடமிருந்து பாஜக பெற்றுவிட்டது.
இந் நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எதியூரப்பா, சட்டசபை பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து 29ம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்க பாஜக தீர்மானித்துள்ளது. அன்றைய தினம் முதல்வராக எதியூரப்பா பதவியேற்கிறார். பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
தென்னகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவது இதுவே முதல் முறையாகும். அந்த வகையில், தென்னகத்தின் முதல் பாஜக முதல்வர் என்ற பெயரைப் பெறுகிறார் எதியூரப்பா.