தனி ஈழம் கோரிக்கை-கைவிட யு.எஸ். கோரிக்கை
கொழும்பு: 95 சதவீத தமிழர்கள் தனி நாட்டை விரும்பவில்லை. எனவே தமீழழ கோரிக்கையை விடுதலைப் புலிகள் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ராபர்ட் பிளாக் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். தனி தமிழ் ஈழ நாடு கோரிக்கையை பிரபாகரன் கைவிட்டால் அவருக்கு செல்வாக்கு அதிகரிக்கும், தமிழர்கள் மத்தியில் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைக்கும் எனவும் பிளாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் பலரிடம் நான் பேசியபோது, தனி நாடு குறித்து கருத்து கேட்டேன். அதற்கு நான் சந்தித்த தமிழர்களில் 95 சதவீதம் தனி நாட்டை விரும்பவில்லை என்று ெதரிய வந்தது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் ஈழம் அமைவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.
பிரபாகரன் கோரும் தனி தமிழ் ஈழ நாட்டை அவர்கள் ஆதரிக்கவில்லை. எனவே பிரபாகரன் ஆயுதத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். அதுவே அமைதி திரும்ப ஒரே வழி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் இலங்கை இனப் பிரச்சினை தீர இதுவே ஒரே வழி.
இதை நான் பிரபாகரனுக்கு வேண்டுகோளாக விடுக்கிறேன். தனி தமிழ் ஈழக் கோரிக்கையை அவர் கைவிட வேண்டும். அப்படி அவர் செய்தால் தமிழர்கள் மத்தியில் செல்வாக்கும், வரவேற்பும் கிடைக்கும். அவர் மீதான நம்பிக்கையும் பெருகும்.
கொழும்பு நகரில் பெரும்பான்மை சமூகமான சிங்களர்களுடன் தமிழர்களும், முஸ்லீம்களும் இணக்கத்துடன் வாழ்கின்றனர். அங்கு இன பாகுபாடு ஏதும் இல்லை.
மனித உரிமைகளைப் பேணிக் காப்பது இலங்கை அரசின் கடமை. இலங்கையின் கிழக்கில் அமைதி திரும்பி வருகிறது. இரவிலும் கூட மக்கள் சுதந்திரமாக நடமாடும் அளவுக்கு நிலைமை மேம்பட்டுள்ளது.
இலங்கை அரசு அங்கு பல நல்ல திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. சினிமாவுக்கு போவதும், மார்க்கெட்டுக்குப் போவதும் அங்கு சுதந்திரமாக உள்ளது. இது 20 ஆண்டுகளில் இல்லாத நிலைமை என்று கூறியுள்ளார் பிளாக்.












Click it and Unblock the Notifications