கரூர் அருகே 17,000 டெட்டனேட்டர்கள் கொள்ளை
கரூர்: கரூர் அருகே தனியார் கிட்டங்கியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 17 ஆயிரம் டெட்டனேட்டர்களை ஒரு கும்பல் திருடிச் சென்றது. இது நக்சலைட்டுகளின் கைவரிசையா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் புன்னம்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கல் குவாரிகளுக்குத் தேவைப்படும் வெடிபொருட்களை விற்று வருகிறார். இதற்காக அப்பகுதியில் ஒரு வெடிபொருள் கிட்டங்கியை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கிட்டங்கியை மூடி விட்டு வீட்டுக்குப் போனார். நேற்று காலை மீண்டும் பணிக்கு வந்தபோது கிட்டங்கியின் கதவு உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்து அதிர்ந்தார்.
உள்ளே போய் பார்த்தபோது, அங்கிருந்த டெட்டனேட்டர் பார்சல்களைக் காணாமல் திடுக்கிட்டார். உடனடியாக இதுகுறித்து போலீஸில் அவர் புகார் கொடுத்தார்.
போலீஸார் மோப்ப நாய்கள் சகிதம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
திருட்டுப் போன பார்சல்களில் மொத்தம் 17 ஆயிரம் டெட்டனேட்டர்கள் இருந்துள்ளன. எனவே இவற்றை நக்சலைட்டுகள் யாரேனும் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கிட்டங்கியின் உள்ளே மது பாட்டில்களும் கிடந்தன. எனவே கொள்ளையடிக்க வந்த கும்பல் இரவில் வந்து குடித்து விட்டு நிதானமாக கொள்ளையடித்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பெருமளவிலான டெட்டனேட்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் அவற்றை மீட்க போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.