ஓகேனேக்கல: எதியூரப்பாவுக்கு கிருஷ்ணசாமி கோரிக்கை
சென்னை: தமிழக மக்களின் ஜீவாதாரப் பிரச்சினையான ஓகேனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு புதிதாக கர்நாடகத்தில் பதவியேற்கவுள்ள பாஜக அரசு இடையூறாக இருந்து விடக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் பேரியக்கம் கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் கடந்த 2004ம் ஆண்டை விட 15 இடங்கள் கூடுதலாகப் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில் ஆட்சிக்கு வரவிருக்கும் பாஜக, தமிழக மக்களின் ஜீவாதார உரிமைப் பிரச்சனைக்கு விரோதமாக இருந்து விடக் கூடாது. அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் இல.கணேசன் கூட ஓகேனக்கல் குடிநீர் திட்டம் நிறைவேற தேசியவாதியான எடியூரப்பா தடையாக இருக்க மாட்டார் என்று தெரிவித்திருக்கிறார். அவரது கருத்தை நான் வரவேற்கிறேன்.
எனவே கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களுக்கான குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு புதிய கர்நாடக அரசு இடைஞ்சலாக இல்லாமல் உறுதுணையாக இருக்க வேண்டும்.
அத்திட்டம் தமிழகத்துக்கு உரிமையானது என்ற கடந்த கால வரலாற்றை மறந்துவிடக் கூடாது. கர்நாடக மாநில அரசாலேயே ஏற்கப்பட்டது என்பதையும் புறக்கணித்துவிடக் கூடாது. அதன்மூலம் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் மாநில உறவைப் பேணிக் காத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications