பெர்லின்: பன்றிகளிடம் சிக்கிய கார் திருடன்!
பெர்லின்: காரை திருடிக் கொண்டு காட்டுக்குள் தப்பியவர், காட்டுப் பன்றிகளிடம் சிக்கினார். அவரைப் பிடிக்கத் துரத்திய போலீஸார், பன்றிகளிடமிருந்து அந்தத் திருடனை பத்திரமாக மீட்டனர்.
ஜெர்மனியின் ஷெவரின் என்ற நகரில் இந்த வினோத விரட்டல் நடந்துள்ளது. அந்த நகரில் இரவு ரோந்தில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். அப்போது 18 வயது வாலிபர் ஒருவர், தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஓபல் காரை திருடிக் கொண்டு கிளம்பினார்.
இதைப் பார்த்த ரோந்து போலீஸார் அந்த காரை துரத்தினர். ஆனால் நிற்காமல் பறந்த அந்த நபர், அருகில் இருந்த வனப் பகுதிக்குள் வண்டியை விட்டார்.
காட்டுக்குள் வேகமாக சென்ற கார், அங்கு உலவிக் கொண்டிருந்த காட்டுப் பன்றிக் கூட்டத்திற்குள் புகுந்தது. இதனால் மிரண்ட பன்றிகள், தங்களை டிஸ்டர்ப் செய்த காரை சுற்றி வளைத்தன.
காட்டுப் பன்றிகள் மொத்தமாக சூழ்ந்ததால் பயந்து போன திருடன், உடனடியாக காரை நிறுத்தி விட்டு உதவி கோரி குரல் எழுப்பினார். பின் தொடர்ந்து வந்த போலீஸார் பன்றிக் கூட்டத்திற்குள் திருடன் சிக்கியதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவரை மீட்கும் முயற்சியில் இறங்கினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பன்றிகளை விரட்டிய பின்னர் காருக்குள் நடுங்கிக் கொண்டிருந்த திருடனை வெளியே கொண்டு வந்தனர்.












Click it and Unblock the Notifications