திருமூர்த்தி மலை அருவியில் குளிக்க நிரந்தர தடை
உடுமலைப்பேட்டை: காட்டாற்று வெள்ளத்திற்கு 13 பேர் உயிரைக் காவு கொண்ட திருமூர்த்தி மலை, பஞ்சலிங்க அருவியில் குளிக்க நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலுக்கு அருகில் பஞ்சலிங்க அருவி உள்ளது.
இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து குளிப்பது வழக்கம். ஆனால் மலைப் பகுதியில் மழை பெய்தால் காட்டாற்று வெள்ளம் ஏற்படும். எனவே அந்தசமயத்தில் குளிக்கக் கூடாது என்று எச்சரித்து அங்கு விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் அருவியில் பலர் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. எனவே யாரும் குளிக்க வேண்டாம் என கோவில் நிர்வாகத்தினர் மைக் மூலம் எச்சரித்தனர். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் குளித்தவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.
இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரு பெண்கள் உள்பட நால்வரின் உடல்களும், நேற்று 4 உடல்களும் மீட்கப்பட்டன.
புதுச்சேரியைச் சேர்ந்த பாபு, சண்முகம், பாஸ்கர், சேலம் தங்கராஜ், சசிக்குமார் ஆகியோரின் உடல்களை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் திருமூர்த்தி மலை அருவியில் இனிமேல் யாரும் குளிக்கக் கூடாது என வனத்துறை நிரந்தரத் தடை விதித்துள்ளது. இங்கு அடிக்கடி உயிர்ப் பலி ஏற்படுவதால் இந்தத் தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.